16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குமாரசாமியின் மஜகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளன. குமாரசாமி தலைமையில் பதவியேற்ற அரசு, தனது முதல் வரவு-செலவு பதிகை செய்தது. தொடர்ந்து 49,000 கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், வரவு-செலவில் வட கர்நாடகத்துக்கு, மாநில அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும், சட்டமன்றத்தில் போதுமான பிரதிநிகள் இல்லையென்றும் கூறி 'தனி மாநில கோரிக்கை' முன் வைத்து சில உள்ளூர் அமைப்புகள் பிரச்சனை செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்தப் பிரச்னையின் வீரியம் அதிகரித்து வருவதையொட்டி, அது குறித்து பேசியுள்ளார் குமாரசாமி. வட கர்நாடகத்திலும் அரசு நிர்வாகம் முறைப்படி செயல்பட வேண்டும் என்ற நோக்கில், அங்கு சில அரசு அதிகாரிகள் செயல்படுவதையும், அரசு அலுவலகங்கள் செயல்படுவதையும் உறுதி செய்யப் போகிறோம். வட கர்நாடக மக்களுக்கு நான் ஒரேயொரு கோரிக்கையை வைக்கிறேன். நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளேன். அதை அமல்படுத்த அனுமதியுங்கள் என்றவர், தொடர்ந்து, வட கர்நாடகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு எனக்கு நேரம் வேண்டும். எந்த வித தொந்தரவுகளும் இல்லாமல் எனக்கு ஓர் ஆண்டு கொடுக்கப்பட்டால் தேவையான மாற்றங்களை செய்துவிடுவேன். நான் வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் வேலை செய்யத் தயார் என்று சொல்லியுள்ளார். இந்தப் பிரச்னை தற்போது பூதகரமெடுத்துள்ளதால், பாஜக தனக்கான வேலைகளைத் தொடங்கி விட்டதாம். எடியூரப்பா, முதல்வர் மக்களை பிரித்து ஆளப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு குமாரசாமி, நான் 49,000 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடன்களை தள்ளுபடி செய்துள்ளேன். அதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு விசயம் தேவைப்படுகிறது. இதை கையிலெடுத்துக் கொண்டார்கள் என்றுள்ளார். வட கர்நாடக்கதில் இருக்கும் 13 மாவட்டங்களில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் அமைப்புகள் நாளை கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



