27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க என்று கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கு முரணாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுக்க நடுவண் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளாக மத்திய வெளியுறவுதுறை அமைச்சகம், மனித உரிமை மீறல்களை தடுக்க தவறியுள்ளதால் இந்த விவகாரத்தை சர்வதேச அறங்கூற்றுமன்றத்துக்கு கொண்டு செல்ல நடுவண், மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மீனவர் நலஅமைப்பு என்ற ஒரு அமைப்பின் தலைவர் பீட்டர்ராயன் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இலங்கைக்கான துணை செயலாளர் பினோய் ஜார்ஜ் பதிகை செய்த பதில் மனுவில், சர்வதேச அறங்கூற்றுமன்ற சட்டத்தின்படி இரு நாடுகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலோ அல்லது இரு நாடுகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் சர்வதேச அறங்கூற்றுமன்றத்தை நாடலாம் என ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே சர்வதேச அறங்கூற்றுமன்றத்தை நாட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை அறங்கூற்றுவர் இந்திராபானர்ஜி, அறங்கூற்றுவர் அப்துல்குத்தூஸ் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிலோ, நடுவண் - மாநில அரசுகள் தரப்பிலோ யாரும் அணியமாகாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



