சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராஜஸ்தானியர் மூன்று பேர் துப்பக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகளில் மூவரை மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. 28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதன்கிழமை பிற்பகலில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் குற்றநிகழ்வு சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை சௌகார்பேட்டையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலி சந்த் என்பவர் அடகுக்கடை ஒன்றை நடத்திவந்தார். இவர் வால்டாக்ஸ் சாலையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தார். இவருக்கு புஷ்பா பாய் என்ற மனைவியும் ஷீத்தல் குமார் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உண்டு. மகன் ஷீத்தல்குமாருக்கு ஜெயமாலா என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். மகள் பிங்கிக்கு திருமணமாகி அவர் தனியாக வசித்துவந்தார். மகன் ஷீத்தல்குமாரும் மருமகள் ஜெயமாலாவும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை மாலையில் பிங்கி தன் தந்தை தனது அழைப்பை வெகுநேரம் எடுக்காததால், அப்பா வீட்டிற்கு வந்தார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவரது தந்தை தலி சந்த், தாய் புஷ்பா, சகோதரர் ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த கொலை நிகழ்வு காவல்துறைக்கு தெரிவிக்கப்படவே, அவர்கள் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு படக்கருவிகள் காட்சிகளை வைத்து தங்கள் புலனாய்வைத் தொடங்கியது. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று மூன்று பேரைக் கைதுசெய்திருப்பதாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்ப புலனாய்வு, மனித புலனாய்வு, கண்காணிப்பு படக்கருவி காட்சிகளைப் பயன்படுத்தி வழக்கில் புலனாய்வைத் தொடங்கினோம். இந்தக் கொலையில் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், விலாஷ் உட்பட ஆறு பேர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அதில் மூன்று குற்றவாளிகள் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் கைது செய்யப்பட்டனர் என்று மகேஷ்குமார் தெரிவித்தார். ஷீத்தல் குமாருக்கும் அவரது மனைவி ஜெயமாலாவுக்கும் தொடர்ந்து கருத்துவேறுபாடு இருந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்கு சொத்தின் ஒரு பகுதியை ஜெயமாலா கேட்க, அதனை ஷீத்தல் குமாரின் குடும்பம் மறுத்துவந்ததாம். இது தொடர்பாக அவர்கள் புனே காவல்துறையிலும் சென்னை நகரக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனராம். சில நாட்களுக்கு முன்பாக தலீப் சந்த் குடும்பத்தை யாரோ சிலர் தானியில் வந்து மிரட்டிச் சென்றுள்ளனர். அது தொடர்பான புகாரில் தானி ஓட்டுனரைப் பிடித்து காவல்துறை விசாரித்துவந்தது. இந்த நிலையில்தான் இந்த கொலை நடைபெற்றுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை காலை 6.30 மணி விமானத்திலேயே ஆறு காவலர்கள் புனேவுக்குச் சென்றனர். அவர்கள் பூனே நகரக் காவல்துறையுடன் சேர்ந்து, குற்றவாளிகள் சோலாபூரில் இருக்கலாம் என்று கருதி அந்த மாவட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். குற்றவாளிகள் சென்ற வாகனமும் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த வாகனம் எதிர் திசையில் செல்லத் தொடங்கியது இதையடுத்து அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தோம். இதையடுத்து அவர்கள் வாகனத்தை வேகமாக செலுத்தினர். இந்தத் துரத்தலின் முடிவில் அந்த வாகனத்தை இடைமறித்து முன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். இதில் முதன்மையான குற்றவாளி கைலாஷ். அவர் ஷீத்தலுடைய மைத்துனர். இது தவிர ரவீந்திரநாத், விஜய் உத்தம் என மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்தக் காரும் கொலைசெய்யப் பயன்படுத்திய ரிவால்வரும் கைப்பற்றப்பட்டன. மற்ற மூன்று குற்றவாளிகளைப் பிடிக்க இன்னொரு அணி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர மாநில காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டோம் என காவல்ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்தார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழ்நாட்டில் வாங்கப்பட்டதில்லையென்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து சிறிய லாக்கர் ஒன்று காணாமல் போயிருப்பதாகவும் ஐந்து ரவுண்டுகள் சுடப்பட்டிருப்பதாகவும் இது ஒரு திட்டமிட்ட கொலை எனக் கருதுவதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



