தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு
மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடிச்சோதனை? இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தல்
ரத்து? தி.மு.க நிர்வாகிகள்-ஆளுநர் சந்திப்பு என அரசியல் களம் அடுத்தக்கட்டத்தை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தனிப் பெரும்பான்மை இருப்பினும், வருமான வரித்துறை சோதனைகள்
தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில்,
‘வருமான வரி சோதனை தொடர்பாக விசாரணை
நடந்தால் அரசு கவிழ வாய்ப்பு இருக்கிறது’ என
பா.ஜ.க தலைவர் தமிழிசை கூறிய கருத்து, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தல்
ரத்து என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, தமிழிசை தெரிவிக்கிறார். தமிழக
அரசு கவிழும் என்று பேசுகிறார் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க? என ஆளும்கட்சி
நிர்வாகிகள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்
கொதிப்பை நேரடியாகக் காட்டத் தொடங்கிவிட்டது அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழான
நமது எம்.ஜி.ஆர். கடந்த சில நாட்களாக பா.ஜ.க.வை விமர்சிப்பதை முழுநேர வேலையாக மாற்றிவிட்டார்கள்.
இன்று
வெளிவந்த நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில், ‘கொள்கைக் கொதிப்பும்! குடுகுடுப்பை குதிப்பும்’
என்ற கட்டுரையில் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அந்தக்
கட்டுரையில், ‘குடுகுடுப்பை குறிப்பிடுவது எந்த வருமான வரி சோதனையை? சஹாரா குழுமத்தின்
மீது நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் இன்று நாடாளும் பிரதமர் மோடிக்கு அன்று பல
கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கைப்பற்றப்பட்ட அந்த ஆவணத்தின் அடிப்படையிலா? அப்படியென்றால்
நடுவண் அரசு அல்லவா கவிழ வேண்டும்? இல்லை, கர்நாடக மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தல்
பிரசாரத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பொது இடத்தில் கத்தை கத்தையாக
பணத்தை எடுத்து வாக்காளர்களுக்கு வநியோகம் செய்த படக் காட்சிகளை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கலாம்
என்றால், அதுவும் முடியாதே! காரணம் அங்கே நடப்பது காங்கிரசின் ஆட்சி. மேலும்,
துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டு ஏழேகால் கோடி மக்கள் ஓட்டுப் போட்ட ஒரு அரசாங்கத்தை
கலைத்துவிடலாம் என்று கனாக் கண்டால், இனி இந்தியாவில் எந்தக் காலத்திலும் மக்களாட்சி
என்பது மருந்துக்கும் இல்லாமல் போய்விடுமே. மக்களால்
கட்டி எழுப்பப்பட்ட ஜனநாயகத்திலான அரசுகளை கணினியில்; திட்டமிட்டு அச்சடிக்கப்பட்ட
ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டு கவிழ்ப்போம் என்று நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது,
‘அந்தக் காகிதமே’
சோதனையிட்ட இடத்தில் அங்கே, ‘வச்சிருந்ததை எடுத்து வந்ததா? இல்லை,
அங்கு கொண்டு சென்று வச்சு எடுத்து வந்ததா?’ என்னும் சந்தேகம் மக்களுக்கு எப்போதோ வந்துவிட்டது.
ஒருவேளை
உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், கோவா, மணிப்பூர் என்று ஜனநாயகத்தை வரிசைகட்டி பலி
இட்டு வரும் பா.ஜ.க அதனை தமிழகத்தில் நடத்திப் பார்க்கலாம் என ஆசைப்பட்டால் அது விபரீதம்;
விஷப் பரீட்சை. ‘நடுவண் அரசு என்று ஒன்று இல்லாமல்
போயினும் மாநில அரசுகள் இருக்கும். ஆனால் மாநிலங்கள் என்பது இல்லாமல் போனால் நடுவண்
அரசு என்பதே இயலாது போய்விடும்’ என்ற அண்ணாவின் கருத்துரையை காவி இயக்கம் கணக்கில்
கொள்வது நன்று. எனக் காட்டமாக விமர்சித்துள்ளனர். மேலும்,
‘நற்றமிழ் பூமியும்! நச்சுக் கிருமியும்!’ என்ற தலைப்பிலும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது
நமது எம்.ஜி.ஆர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



