18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 5-வது வரவு-செலவை நாடாளுமன்றத்தில் நாளை (வியாழன்) பதிகை செய்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவைவரி அறிமுகத்துக்குப் பிறகு இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது. வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலை, கட்டமைப்பு திட்டங்கள், தொடர்வண்டித் துறையை நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிகமான நிதியை ஒதுக்க வேண்டிய நிலையிலும் நடுவண் அரசு இருக்கிறது. இது தவிர நிதிப்பாற்றாக்குறை என்பது நாட்டின் கடன் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் ஒரு அம்சமாகும். நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே சர்வதேச தர நிறுவனங்கள் சாதமாக வரிசைஎண் அளிக்கும். ஆனால், நடப்பு நிதிஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3.2 விழுக்காடக இருக்க வேண்டும். ஆனால், நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 112 விழுக்காட்டை எட்டிவிட்டது. இந்த நிதியாண்டு முடிய இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், கையறு நிலையில் நடுவண் அரசு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அடுத்த நிதிஆண்டுக்கு இந்த நிதிப்பற்றாக்குறையை 3 விழுக்காடாக குறைக்க இலக்கு வைத்து பெரிய மாயாவியாகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. சரக்கு-சேவை வரி நடைமுறைக்கு வந்தபின் சிறுதொழில்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை சரிக்கட்டும் விதத்தில் சில சலுகைகளையும் ஜேட்லி அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். குறிப்பாக, சமானிய மக்களை திருப்தி படுத்தும் வகையில், புதிய திட்டங்கள், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி, ஊரக குடியிருப்புகள், நீர்பாசனத் திட்டங்கள், பயிர்காப்பீடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நடுவண் அரசு இருக்கிறது. இதுதவிர, சமானிய மக்களின் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இதை அனைத்தையும் சமாளிக்கும் வகையில், சரிக்கட்டும வகையில் இந்த வரவு-செலவு அமைவது அவசியம். சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிராமப்புற மக்களின் வாக்குகளையும், ஆதரவையும் பாஜக பெருவாரியாக இழந்திருந்தது. இதை மீட்கும் வகையில், கிராம மக்களின் வாக்குகளைக் கவர திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நிதி அமைச்சர் ஜேட்லி இருக்கிறார். பாஜக ஆளும் 3 மாநிலங்கள் உள்பட 8 மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வேறு நடக்கிறது, இவை அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையிலும் வரவு-செலவில் அறிவிப்புகளை பாஜக அரசு வெளியிட வேண்டும். மேலும், கார்பரேட் வரி கடந்த 4 ஆண்டுகளாக 30 விழுக்காட்டில் இருந்து குறைக்கப்டவில்லை. அதை 25 விழுக்காடாக குறைக்க உறுதியளித்தும் நடுவண் அரசு செயல்படுத்தாமல் இருக்கிறது. அதை நிறைவேற்றும் நிலையிலும் நடுவண் அரசு இருக்கிறது. இப்படிக் கடுமையான சவால்களை தோளில் சுமந்து கொண்டு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாளை வரவு-செலவு பதிகை செய்கிறார். நாட்டில் நிலவும் விவசாயிகள் பிரச்சினை, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை ஆகிய சிக்கல்களை சமாளிக்கும் வகையில் கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கான வரவு-செலவை அறிவிப்பாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது வரை பாஜக அரசு, மக்களை நடுத்தெருவில் அலையவிடும் வேதனைகளை மட்டுமே அரங்கேற்றி அதையும் சாதனை என்று பீற்றி தமக்குத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வரவு-செலவிலும் ஏதாவது தகிடு தத்தங்களை செய்து விட்டு வழக்கம் போல சாதனை என்று பீற்றிக் கொள்ள முயலுமானால், விரைவில் மக்கள் பாஜகாவை ஆட்சியை விட்டு அப்புறப் படுத்துவது திண்ணம்! பாஜக தனக்கான விதியை எப்படி எழுதிக் கொள்ளப் போகிறது என்பதை நாளை காலை 11 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,684
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.