17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்க பாபா எனப்படும், சாமியார் சுதிர் மக்கார், கன்வர் புனிதபயணத்தில், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து, பங்கேற்றுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், காவ்முக், கங்கோத்ரி, பீகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து, கங்கை ஆற்று நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி, கன்வர் புனிதபயணம் என அழைக்கப்படுகிறது. இந்த பயணத்தில் பங்கேற்கும், லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நீரை எடுத்து வந்து, தங்கள் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வைத்து பூசை செய்வர். பிரசித்தி பெற்ற இந்த புனிதபயணத்தில், தங்கச் சாமியார், ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து, 25வது ஆண்டாக, இந்தாண்டும், கன்வர் புனிதபயணத்தில் பங்கேற்றுள்ள தங்கச்சாமியார், 20 கிலோ எடைஉள்ள, ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துள்ளார். கடந்த, ஆண்டு நடந்த யாத்திரையில், தங்கச்சாமியார், 12 கிலோ எடையளவு தங்க நகைகளை அணிந்திருந்தார்; தங்கச்சாமியார் அணிந்துள்ள நகைகளில், 21 தங்க சங்கிலிகள், கடவுளர் உருவங்கள் பதித்த, 21 பதக்கங்கள், தங்க உள்ளாடை உள்ளிட்டவை உள்ளன. தங்கச்சாமியாரின் பின், அவரது படை, பரிவாரங்கள், பல வாகனங்களில் வருவது வழக்கம். நகைகள் தவிர, 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் அவர் அணிந்து உள்ளார். அவர் பின் அணிவகுத்து செல்லும் வாகனங்களில், பி.எம்.டபிள்யு, பார்ச்சுனர்ஸ், ஆடி, இன்னோவா உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களும் அடக்கம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,867.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



