மின்னணு வாக்குப் பெட்டிகள் மீது மக்கள் நம்பிக்கை
இழந்து விட்டார்கள். இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும்
என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.
இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், இனிவரும்
தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம்
16 அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இக்கோரிக்கை
பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது வரவேற்கத்தக்க மாற்றமாகும். 2009-ம்
ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகமானவை அல்ல என்று பா.ம.க. குற்றம்சாட்டியபோது,
தில்லு முல்லு செய்கிற இடத்தில் இருந்ததால், அதை ஏற்க மறுத்து கிண்டல் செய்த தி.மு.க.வும்,
காங்கிரஸ் கட்சியும் இப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது
பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும். மின்னணு
வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக 2009-ம் ஆண்டில் பா.ம.க. முன்வைத்த குற்றச்சாட்டுகள்
அனைத்தும் இப்போதும் அப்படியே உள்ளன. தமிழகச்
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இருமுறை டெல்லியில்
சந்தித்த நான் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியதுடன்,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்
என்று கேட்டுக்கொண்டேன். இதுகுறித்து
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா
மகாஜன், நடுவண் அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் இதுதொடர்பாக சந்தித்து
பேசினேன். அவர்கள் அனைவருமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டுகளை
பயன்படுத்துவதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். உலகில்
தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில்கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
உலகில் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வழக்கமுள்ள 118 நாடுகளில்
இந்தியா, பிரேசில், வெனிசுலா ஆகிய 3 நாடுகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. நெதர்லாந்து, ஜெர்மனி, பராகுவே ஆகிய நாடுகள் மின்னணு
வாக்குப்பதிவு எந்திர முறையை கைவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாறியிருக்கின்றன.
மேலும் 9 நாடுகளும் வாக்குப்பதிவு எந்திரங்களை கைவிட தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில்
இந்தியா மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்
கொண்டிருக்க அவை ஒன்றும் அவ்வளவு புனிதமானவை அல்ல. மக்கள்
பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் புனிதமான செயலாகும். அதற்கான நடைமுறை
எள்ளின் முனையளவுக்குக் கூட ஐயமற்றதாக இருக்க வேண்டும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு
எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அவற்றுக்கு விடை கொடுத்து
விட்டு, இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர
வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



