இந்தியாவின் அடையாளமாக, அரசியல் அமைப்புச்சட்டத்தில் நாம் பதிவு செய்துகொண்டுள்ள, மதச்சார்பின்மையைக் காப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து குடிமக்களின் பொறுப்பு என சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹிந்து மத தெய்வங்களையும், கோவில்களையும் விமர்சித்து பேசியதாக கிறித்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் மீது, தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி, மோகன் சி.லாசரஸ், சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுக்கள் பதிகை செய்திருந்தார். இந்த மனுக்களை அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, ஆவடியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு மனுதாரர் பதிலளித்தாரே தவிர, ஹிந்து மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தும் கூறவில்லை எனவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு தொடர்பான காணொளியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் மோகன் சி. லாசரஸ் தரப்பில் அணியமான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோல பேசப்போவதில்லை எனவும் உத்தரவாதம் அளித்து அவர் தரப்பில் மனு பதிகை செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தப்பாட்டை இத்துடன் முடித்துக் கொள்ள தயாராக இருப்பதாக புகார்தாரர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ், மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவில், மனிதனை நல்வழிப்படுத்தும் மதம், நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. தங்கள் மதம் பெரியது எனக் கூறி, மாற்று மதத்தின் மீது நஞ்சு கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது, மதத்தின் நோக்கமோ, மத நம்பிக்கைகளின் நோக்கமோ அல்ல. மதபோதகர்கள் மிகுந்த பொறுப்புடன் பேச வேண்டும். இல்லாவிட்டால் அது நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் முதன்மை அம்சமான மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆபத்தாகி விடும். மேலை நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமம் என்பதையே நமது மதச்சார்பின்மை காட்டுகிறது என்றார். பிற மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என ஏசுநாதர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அறங்கூற்றுவர் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் அரசியலமைப்பை, அடையாளத்தை, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது அனைத்து குடிமக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.