Show all

கொரோனா தடுப்பூசி ஒத்திகை! ஓர் அலசல்

நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வைப்பதே இதன் முதன்மை அம்சமாகும்.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தடுப்பூசி கொண்டுதருதலை இயங்கலை வாயிலாக கண்காணித்தல், பரிசோதனை பற்றுத்தாள் மற்றும் ஒதுக்கீடு, பணியாளர்களை தயார்படுத்துதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு அறிவுரைகளை வழங்குதல் போன்றவை இந்த ஒத்திகையில் இடம்பெற்றுள்ளன. 

நாட்டில் பேரிடர்கள் நிகழும் போது அதை தடுப்பது எப்படி என்று அவ்வப்போது ஒத்திகை நடைபெறும். தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி, நிலநடுக்கம், சுனாமி, தீவிரவாத தாக்குதல் நடைபெறும் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஒத்திகை நடத்தப்படும். அதுபோல கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டியவை குறித்து நேற்று நாடு முழுவதும் ஒத்திகை நடைபெற்றுள்ளது. 

கொரோனா நுண்நச்சுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் பாரத் பயோடெக், சீரம் இந்தியா ஆகிய மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சில கிழமைகளில் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும். 

தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போட்ட பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும். எண்ணிமச் சான்றிதழும் உருவாக்கப்படும். 

எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறி விட்டார்கள் போன்ற அறிக்கைகளும் செயலியில் உருவாக்கப்படும். தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன கிடங்குகளின் வெப்பநிலையையும் நிகழ்நேரத்தில் செயலி அனுப்பும் என நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையில், கோவிட் -19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதை எவ்வாறு மக்களுக்கு போடவேண்டும்? என்றும் இதன் மூலம் தடுப்பூசி வழங்கலின் போது என்னென்ன தடைகள் ஏற்படுகிறது, அவை எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒத்திகை நடைபெற்றது. 

கொரோனா தடுப்பூசியின் இந்த ஒத்திகையில் உண்மையான தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை. தடுப்பூசி தவிர பிற செயல்முறை அனைத்தும் உண்மையான அடிப்படையில் சோதிக்கப்பட்டது. இந்த ஒத்திகையின்போது, கோ-வின் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யப்பட்டனர். இந்த செயலியில் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கும் வழிமுறைகள் ஆராயப்பட்டன. 

தடுப்பூசி போட்ட பிறகு, கோ வின் செயலி மூலம் எண்ணிமச் சான்றிதழும் கிடைக்கும். இது தவிர இந்த ஒத்திகையில் தடுப்பூசி எங்கு போடப்படும், அந்த மையங்கள் எவ்வாறு அடையாளம் காணப்படும் என்பதும் ஆராயப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம், தடுப்பூசி வழங்கலின் முழு செயல்முறையும் பரிசோதிக்கப்பட்டு ஆராயப்படும். 

நாடு முழுவதும் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வானது 116 மாவட்டங்களில் 259 மையங்களில் 25 தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தி பார்க்கப்பட்டது. மாவட்ட மருத்துவமனை, நகர்ப்புற மையங்கள், தனியார் நலங்குத்துறை மையங்கள், கிராமப்புற பகுதிகள் போன்றவைகளிலும் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் போது அதை செயல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். 

தடுப்பூசி போடும் பணிகளுக்காக ஒன்றிய அளவிலான பயிற்சியில் 2,360 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று வரை மாநில அளவிலான பயிற்சிகள் நடைபெறுகின்றன. 681 மாவட்டங்களில் உள்ள 49,604 பயிற்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.