Show all

நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

ஆதார் எண்ணை கட்டாயமாக்கவும், அரசு மானியங்களைப் பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா, மக்களவையில் வௌ;ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

 

பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மசோதா சட்டமாக வேண்டுமெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஆனால், பண மசோதாவாக அறிமுகம் செய்யப்படும் மசோதாவுக்கு மக்களவையின் ஒப்புதல் கிடைத்தாலே போதுமானதாகும். அதன்பிறகு, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அதுவும் 14 நாட்களுக்குள் மசோதா மீது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், மாநிலங்களவையின் ஒப்புதலின்றியே, மசோதா தானாகவே நிறைவேறிவிடும்.

 

முன்னதாக, மக்களவையில் இந்த மசோதாவை நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவாதத்துக்காக வௌ;ளிக்கிழமை கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து, அந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

 

பிஜு ஜனதா தள உறுப்பினர் ததாகத் சத்பதி பேசியபோது, ஆதார் திட்டத்துக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை தனது கண்காணிப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 

இதுவொன்றும் பண மசோதா அல்ல. ஆனால் அந்த மசோதாவாக ஆதார் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலங்களவையின் மீளாய்வுக்கு உட்படுத்தாமல் மசோதாவை நிறைவேற்றவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஒரேமாதிரியான அணுகுமுறையைத்தான் கடைபிடிக்கின்றன.

 

பண மசோதாவாக, ஆதார் மசோதாவை கொண்டு வந்திருப்பதற்கு அதிகாரிகளே காரணமாவர். நடுவண் அரசிடம் சில அதிகாரிகள், இந்தச் சட்டத்தை மிகவும் முக்கியமானது என்றும், எனவே அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர் என்றார் சத்பதி.

 

     காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சதாவ் பேசியபோது, நடுவண் அரசின் நடவடிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இது நிலை மாறும் அரசு என்பது தெரிய வருகிறது என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கும், ஆதார் திட்டத்தை விமர்சித்தனர். ஆதார் குறித்து சிபிஐ விசாரணை கோரப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி தெரிவித்திருந்தார் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜிதேந்திர சௌதுரி பேசியபோது,

மசோதாவில் சாதகங்களும், பாதகங்களும் இருப்பதாகவும், ஆகையால் மசோதா மீது விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிவசேனை உறுப்பினர் அரவிந்த் சாவந்த் பேசியபோது,

ஆதார் மசோதாவுக்கு தங்களது கட்சியின் ஆதரவை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்,

மசோதாவின் சில அம்சங்கள் கவலையளிக்கின்றன. ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும். நல்லது என்ற நம்பிக்கையால் அதிகாரிகள் செய்யும் சில செயல்கள், பிறகு பிரச்னைகளை ஏற்படுத்திவிடும் என்றார் சாவந்த்.

 

தெலுங்கு தேச கட்சி உறுப்பினர் ராம்மோகன் நாயுடு பேசியபோது,

ஆதார் திட்டத்தால் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகையால், இந்தத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

 

ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர் ஜே.பி. யாதவ்,

ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் குசலேந்திர குமார் ஆகியோர் ஆதார் மசோதாவுக்கு ஆதரவை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆதார் மசோதா குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பண மசோதாவாக ஆதார் மசோதாவை கொண்டு வந்தது சரியானதுதான். இந்திய அரசின் நிதித் தொகுப்பில் இருந்து விநியோகிக்கப்படும் நிதி தொடர்பான எந்த மசோதாவுக்கும், பண மசோதாவுக்கான தகுதியுள்ளது.

 

ஆதார் மூலம், பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். இதுவரையிலும் ரூ.15,000 கோடி வரை மிச்சப்பட்டுள்ளது.

 

ஆதார் எண்ணுக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக பல்வேறு உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர். அதை நடுவண் அரசு தனது கவனத்தில் கொண்டுள்ளது.

 

தனிநபர் குறித்த தகவல்களை அரசு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது. அனுமதியின்றி அதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்றார் ஜேட்லி.

 

மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசால், ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதாரை கட்டாயமாக்குவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

 

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி அண்மையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், ஆதாருக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கும் வகையில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.