Show all

காதலர் நாளில் வெளியாகும் காதல் திரைப்படம்! வாணிபோஜன் முதன்மை வேடத்தில் படம்: ஓ மை கடவுளே


வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவரும் ஒரு காதல் திரைப்படம் என்கிறார் இயக்குநர். மக்கள் என்னசொல்லப் போகிறார்கள் என்பதற்கு காதலர் நாள் வரை காத்திருக்க வேண்டும். வாணிபோஜன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம்: ஓ மை கடவுளே

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காலமெல்லாம் காதல் வாழ்க, என்பது பழந்தமிழர் காதல் குறித்த நிலைப்பாடு. காதலும் வீரமும் தமிழர்தம் இரு கண்கள் என பதினென் மேல் கணக்கு நூல்கள் காதலைக் கொண்டாடும். ஆனாலும் ஆண்டுக்கு ஒருநாள் காதலர் நாள் கொண்டாடும் இன்றைக்குப் போல, அன்றைக்கு காதல் கண்ட இடத்தில் எல்லாம் முன்னெடுக்கப்படாது.  

அந்தக்காலத்தில் ஒரு புன்னை மரத்தடியில் காதல் என்னவானது என்று பாருங்களேன்:- பகல் வேளையில் காதலியைச் சந்திக்க காதலன் ஒரு புன்னை மரத்தடிக்கு வருகிறான் காதலியோ வெட்கப்பட்டு விலகுகிறாள். காதலனுக்குப் புரியவில்லை, ஏன் இப்படி அவள் வெட்கப்பட்டு ஓடுகிறாளென்று. அப்போது காதலியின் தோழி அவனிடம் வந்து சொல்கிறாள். தலைவனே சிறுஅகவையில் நாங்கள் எல்லாம் ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்போம் அப்போது உன் காதலி காய் மறைப்பு விளையாட்டில் புன்னங்கொட்டையை மண்ணில் தொலைத்துவிட்டாள். அந்தப் புன்னங் கொட்டை சிலநாட்கள் கழித்து முளைத்து வந்தது. அப்போது அவளின் தாய் அவளிடம் இந்த புன்னை உனக்கு தங்கைப் போன்றவள் என்று கூற அதனை நம்பி அவளும் தான் உண்ணும் பாலையும் நெய்யையும் அதற்கும் கொடுத்து பாசத்தோடு வளர்த்து வந்தாள். அந்த மரம் அவளுக்கு தங்கை போன்றது அதன் அடியில் தான் நீ இப்போது நிற்கிறாய், தங்கையை அருகில் வைத்துக்கொண்டு அவள் எப்படி உன்னோடு நெருங்கிப் பேசுவாள் என்றாள். அதன் வரிகள்
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கால்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே - நற்றிணை 172

நடப்புக்கு வருவோம். காதலர் நாளான நாளை மறுநாள், ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வெளியாக உள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு இரசிகர்களைக் கவரும் ஒரு காதல் திரைப்படமாக உருவாகியுள்ளதாகவும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

அசோக் செல்வன் கதைத்தலைவனாகவும், ரித்திகா சிங் கதைத்தலைவியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் சின்னத்திரை நயன்தாரா என்று இரசிகர்களால் அழைக்கப்படும் வாணி போஜன் முதன்மை வேடத்தில் நடித்திருப்பதோடு, இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் வாணி போஜன் வேடத்திற்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் சொல்லால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன் அவரே முன்வந்து இந்த வேடத்தைச் செய்தார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் நடிக்கிறார் பூபதி என்னுடைய கல்லூரி இளவல். என்னுடைய குறும்படத்திலிருந்து அவர் தான் படத்தொகுப்பு. இனிமேல் செய்யும் படங்களுக்கும் அவர் தான் செய்வார் என்கிறார் படம் குறித்து இயக்குநர் அஸ்வத்.

அக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு மற்றும் ஹாப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.