ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை முதலில் எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியீடு செய்யக்கூடாது, என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள காணொளியில், ‘ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள முடிவை நாங்கள் எதிர்கிறோம். ‘பொன்மகள் வந்தாள்’ எண்ணிம மேடையில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது. திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். பின்னர் தான் எண்ணிம மேடையில் வெளியாக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



