இன்றைக்குத் தமிழில் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பலசிரமங்களைக் கடந்துதான் தமிழ்த் திரையுலகில் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்கிறார். 14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்றைக்கு தமிழில் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பலசிரமங்களைக் கடந்து தமிழ்த் திரையுலகில் இந்த நிலைக்கு வந்துள்ளார். திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை மற்றும் கலைப்பயணம் குறித்து கூறியதாவது: நான் சென்னையில் உள்ள வீட்டு வசதிவாரியப் பகுதியில் வளர்ந்தேன். எனக்கு 8 அகவை இருந்தபோது என் அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு பெரிதாக படிப்பு இல்லாத என் அம்மா தான் 4 பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்அம்மா மும்பைக்கு சென்று மலிவு விலையில் சேலைகள் வாங்கி வந்து சென்னையில் விற்பார். ஆயுள் காப்பீட்டு முகவர், மனைவணிக நிறுவனங்களில் முகவர் வேலைகள் செய்து எங்களைப் பார்த்துக் கொண்டார். என் 12அகவையின் போது என் மூத்த அண்ணன் உயிரிழந்தார். அவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். என் அண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அது கொலையா என்பது இதுவரை எங்களுக்கு தெரியாது. மூத்த மகனை இழந்த என் அம்மா கவலையில் ஆழ்ந்தார். என் இரண்டாவது அண்ணன் நன்றாக படித்து வேலைக்கு சென்றார். அவருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைத்தது. சரி இனி குடும்பத்தில் சிரமம் தீர்ந்து மகிழ்ச்சிதான் என்று அம்மா நினைத்தார். ஆனால் அந்த அண்ணன் சாலை விபத்தில் பலியானார். அடுத்தடுத்து இரண்டு மகன்களைப் பறிகொடுத்த என் அம்மா நம்பிக்கையை இழந்துவிட்டார். குடும்பத்தை நிருவகிக்க நான் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே பகுதி நேர வேலையில் வருமானம் ஈட்டுவதில் ஈடுபட்டேன். பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க சென்றேன். ஆனால் மாதத்திற்கு ரூ. 5 ஆயிரம் தான் கிடைத்தது. அதை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. பின்னர் தான் தெரிந்தது திரைப்படங்களில் பேரறிமுகமாகி தொடர்களுக்கு வருபவர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கும் என்று. இதையடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்தேன். இதற்கிடையே நான, மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். திரைப்படங்களில் வாய்ப்பு தேடிச் சென்ற இடங்களில் என் நிறம், உடை அடையாளத்தை வைத்து கிண்டல் செய்தார்கள். நீ எல்லாம் கதைத்தலைவியாக பொருளே (மெட்டீரியலே) கிடையாது. துணை கதாபாத்திரங்களில் வேண்டுமானால் நடிக்கலாம் என்றார்கள். நான் தமிழ் பேசியதாலோ என்னவோ எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என் முதல் படமான அவர்களும் இவர்களும் சரியாகப் போகவில்லை. நடித்தால் கதைத்தலைவியாகத் தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். பா. ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பிற நடிகைகள் விரும்பவில்லை. சரி நடித்து தான் பார்க்கலாம் என்று நடித்தேன். அந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். அந்த படத்திற்கு பிறகு நிறைய படங்கள் என்னை தேடி வந்தன, நம்ம வீட்டுப் பிள்ளை வரை. தற்போது என் கையில் 7 படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்கள் அனைத்தும் என்னை மையமாக கொண்டவை. நான் முழுக்க முழுக்க போராடித்தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளேன். பெண்கள் யாரும் போராடத் தயங்காதீர்கள். போராடினால் வெற்றி உறுதி என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



