Show all

மின்சாரம்! கட்டுரை-6

மின்சாரம் குறித்தான இந்த ஆறாவது கட்டுரையில், இடுபொருள் அல்லது எரிபொருள் இல்லாமல் இலவசமாக மின்சாரம் பெறும் வகைக்கு பயன்படுகிற, சூரிய சக்தி மின்சாரம் குறித்து பார்ப்போம்.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மின்சாரம் என்பது பொருள் மாதிரியானதல்ல. அது ஒரு இயக்கம் மட்டுமே. மின்னாக்கிகளை (கம்பிச் சுருளுக்குள் காந்தம் சுழுலும் வகைக்கான இயந்திரம்) நிறுத்தினால் மின்சார இயக்கம் நின்று விடும். மீண்டும் சுழலவிட்டால் மின்சார இயக்கம் தொடரும். மின்சாரம் ஒரு இயக்கம் மட்டுமே என்பதால் அதை சேமிக்கவெல்லாம் முடியாது.

இயற்கையில் நமக்கு கிடைத்திருக்கிற காந்த ஆற்றலே மின் அமைப்பு வேலைகளில் நாம் பயன்படுத்தும் கம்பிகளின் அணுக்களில் மின்னோட்டத்தை உருவாக்க நமக்குக் கிடைத்த கொண்டாத்தக்க வாய்ப்பாகும். 

ஒரு கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை மேலும் கீழுமாக ஆட்டினால் அந்த கம்பியில் மின்னோட்டம் நிகழும். அந்தக் கம்பிச் சுருளின் இரண்டு முனைகளில் மின்சார விளக்கைப் பொருத்தினால் மின்சார விளக்கு ஒளிரும். அந்த ஒளியின் அளவு, காந்தத்தை ஆட்டும் வேகத்திற்கு இணையாக அமையும். 

மின்சாரம் தண்ணீரில் இருந்தோ, நீராவியில் இருந்தோ, அணுசக்தியில் இருந்தோ, காற்றாலை இயக்கும் காற்றில் இருந்தோ தயாரிக்கப்படுவதல்ல. எங்கே மின்சாரம் வேண்டுமென்றாலும் கம்பிச் சுருளுக்குள் காந்தம் இயங்க வேண்டும். 

மின்னாக்கிகளில் (ஜெனரேட்டர்) கம்பிச்சுருளுக்கு நடுவே காந்தத்தைச் சுழற்றுவதற்கே அணை மின் நிலையங்களில் நீரோட்டத்தின் வேகமும், அனல்மின் நிலையங்களில் நீராவியும், அணுமின் நிலையங்களில் அணுசக்தியும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. 

என்று முந்தையக் கட்டுரைகளில் நாம் தெரிவித்திருந்த செய்திகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். ஆனால் சூரிய ஆற்றல் மூலம் உருவாக்கப்படுகிற மின்சாரத்திற்கு காந்தம், கம்பிச் சுருளை வெட்டும் வகைக்கு காந்தத்தை சுழற்ற வேண்டும் என்பனவெல்லாம் தேவைப்படவில்லை. 

சூரியசக்தி நேரடியாக மின்சாரமாக மாற்றப்படுகிறது. அதாவது இந்த வகைக்கு, ஒளியாற்றலை மின் ஆற்றலாக மாற்ற கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அது சூரியத்தகடு என்று அழைக்கப்படுகிறது. நமது வீட்டில் மொட்டை மாடி அறைக்கு சூரியத்தகடுகள் பரப்பி கூரை அமைத்து அதன் மூலம் பகலில் மட்டும் நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி நமது வீட்டின் மின்சாரத் தேவைக்குப் பயன் படுத்திக் கொள்ள முடியும். (இரவிலும் பயன்படுத்தும் வகைக்கு, அந்த மின்சாரத்தை மின்கலன்களுக்கு செலுத்தி இரவிலும் பயன்படுத்தும் நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது)

ஒவ்வொரு சூரியதகடும் பல நூறு சூரிய மின்னாக்கிகள் பரப்பிப் பொருத்தப்பட்டவைகள் ஆகும். ஒரு சூரிய மின்னாக்கி தனித்து உருவாக்கும் மின்சக்தியானது மிக மிக நுட்பமான அளவினதாகும். நமது வீட்டிற்கு, ஒரு கிலோவாட் மின்சாரத் திறனுக்கு அதாவது பதினாறு நாற்பது வாட் விளக்குகள், ஆறு அறுபது வாட் மின்விசிறிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு வீட்டின் கூரையில் 65 அங்குல நீளத்திற்கும் 39 அங்குல அகலத்திற்குமாக சூரியத் தகடு பொருத்த வேண்டியிருக்கும். 

ஒரு ஊருக்கே சூரிய ஒளி மின்சாரம் தருவதென்றால் கி.மீ கணக்கில் சூரியத் தகடு பரப்ப வேண்டியிருக்கும். இது மட்டுமே சூரிய மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள இடர்பாடு ஆகும். ஆனாலும் உலகின் பல நாடுகள் மின்சாரத் தேவைக்கு இலவசமாகக் கிடைக்கும் சூரிய ஒளியைச் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றன.

சரி எப்படி சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை நேரடியாகப் பெற முடிகிறது என்று பார்ப்போம். இந்த வகைக்கு நவீன தொழில்நுட்பத்தில் சிலிகான் என்கிற தனிமம் பேருதவியாகப்பயன்பட்டு வருகிறது. நீங்கள் அன்றாட நாட்காட்டியில் கிழித்து எறிகிற தாளை விட நுட்பமாக சிலிகான் உலோகத்தை சில்லுகளாக வெட்டி பயன்படுத்துகின்றனர். இந்தச் சிலிகான் சில்லுகளில் படுகிற சூரிய ஒளிக்கதிர்தான் மிகமிக குறைந்த அளவு மின்சாரத்தை ஒவ்வொரு சூரிய மின்னாக்கியிலும் உருவாக்குகிறது. பேரளவாக மின்சக்தியை சூரிய ஒளியில் இருந்து பெறுவதற்கு நாம் பலஆயிரம் சூரிய மன்ஆக்கிகளை சூரியத் தகடுகளாகப் பரப்பி பயன்படுத்தி வருகிறோம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,040.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.