Show all

மீண்டும் தங்கள் ஆட்சிகாலத்து பெயரில் ஆப்கானிஸ்தான் பெயர் மாற்றம்! காபூலை கைப்பற்றிய கையோடு தாலிபான்கள் அதிரடி

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானுக்கு இருந்த பெயர் மீண்டும் இப்போது சூட்டப்படுகிறது.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. அப்போது அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியோடு தாலிபான்கள் ஒடுக்கப்பட்டு, அங்கு மக்களாட்சி முன்னெடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில், இப்போது மீண்டும் தாலிபான்கள் எழுச்சி பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா எதிர்ப்பு காட்டாமல் ஏற்கனவே உறுதி அளித்தபடி தனது படைகளை படிப்படியாக வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் பல பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள் இறுதியாக நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றினார். அதிபர் மாளிகை அவர்கள் வசமானது. முன்னதாக, அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அண்டை நாடுகளில் ஏதாவது ஒன்றில் அவர் அடைக்கலம் அடைந்திருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று தாலிபான்கள் மாற்ற உள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாளது 26,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5103 அன்று (11.09.2001) தாலிபான்கள் அமெரிக்க படைகளால் ஒடுக்கப்படும் வரை இந்தப் பெயர்தான் தாலிபான்களால் ஆப்கானிஸ்தானுக்கு சூட்டப்பட்டிருந்தது. மீண்டும் இதே பெயரை சூட்ட இருப்பதாக தாலிபான்களின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும், இருப்பினும் பெயர் வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கு மக்கள் முண்டியடித்து காபூல் விமான நிலையத்தில் குவிந்ததால், பெரும் கூட்டமாக காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க படைத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

உள்ளூர் பேருந்துகளில் முண்டியடித்து ஏறுவது போல விமானத்தில் பலரும் ஏறும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது . தாலிபான்கள் முந்தைய காலத்தை போல கடுமையான சட்டத்திட்டங்களை அமலுக்கு கொண்டு வருவார்கள் என்பதால் பயந்து போய், கணிசமான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. தங்கள் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இயல்புரிமைகள் மறுக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.