Show all

எங்கே? ஏன்? இரண்டு சிறுவர்கள்மீது தண்டனை-உயிர்க்கொலை நிறைவேற்றம்

உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் வட கொரியா அரசு, உள்நாட்டு மக்களுக்கும் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்கவும், மீறியவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் தவறியதில்லை, என்பதன் விளக்கமாக இரண்டு சிறுவர்கள் மீது தண்டனை-உயிர்க்கொலை நிறைவேற்றியிருப்பது பார்க்கப்படுகிறது.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: வட கொரியாவில், தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பதும், கொண்டுதருதலும் தண்டனை உயிர்க்கொலை விதிக்குமளவுக்கு பெரிய குற்றமாகும்.

அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் அடிக்கடி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் நாடு வட கொரியா. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு வட கொரியா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. 

அதே வேளையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசு உள்நாட்டு மக்களுக்கும் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்கவும் தவறியதில்லை. 

கடந்த ஆண்டு கூட, வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்கின் பத்தாவது நினைவு நாளில், 11 நாள் துக்க முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வட கொரிய குடிமக்கள் சிரிக்கவோ, பொருட்கள் வாங்க அலையவோ, மது அருந்தவோ கூடாது. இதனை மீறினால் தண்டனை எனவும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தென் கொரிய, அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக, இரண்டு சிறுவர்கள்மீது, வட கொரியா அரசு, தண்டனை உயிர்க்கொலை நிறைவேற்றியிருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. 

வட கொரியாவில், கே-நாடகங்கள் என்று பேரறிமுகமாக அறியப்பாடும் தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, கொண்டுதருவது தண்டிக்கத்தக்க குற்றமாகவும், அப்படி யாரேனும் செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக உயிர்க்கொலை நிறைவேற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.

இப்படியிருக்க தற்போது வெளியான தகவலின்படி, இரண்டு மாதங்களுக்கு முன்பு வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் சந்தித்துக்கொண்ட 16, 17 அகவையுடைய இரண்டு சிறுவர்கள், பல தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்போதே அந்த சிறுவர்களுக்கு தண்டனை உயிர்க்கொலை விதிக்கப்பட்டு, ஹைசனில் உள்ள ஒரு விமானநிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை உயிர்க்கொலை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, இப்படியான ஆதிக்கவாதத்தின் அடையாளமா வடகொரியா என்பதாக உலகை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,455.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.