Show all

இலங்கையில் பொருளாதார நெருக்கடிநிலை அறிவிப்பு!

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் முதன்மை வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற கட்டாயத்தேவை உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடைகளில் நீண்டவரிசை காணப்படுகிறது.

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் முதன்மை வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

இந்நிலையில், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட கட்டாயத்தேவைப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட கட்டாயத்தேவை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், கட்டாயத்தேவைப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை குடிஅரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முதன்மை உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், படைத்துறை முன்னாள் தளபதி ஒருவரை கட்டாயத்தேவைச் சேவைகள் ஆணையராக அரசு நியமித்துள்ளது. வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், கட்டாயத்தேவைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரிசி, நெல், சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என குடிஅரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசி, சர்க்கரை, பால் மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற கட்டாயத்தேவை உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடைகளில் நீண்டவரிசை காணப்படுகிறது. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உருளைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மருந்துகள், தடுப்பூசி இறக்குமதிக்கு அன்னியச் செலாவணியை பயன்படுத்த உதவும் வகையில், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார். எரிபொருள் பயன்பாடு குறையவில்லை என்றால், அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.