Show all

சுட்ட காலம் போய், நெஞ்சத்தை மெல்ல வருடும் வகையில் வீசுகிறது தென்றல்! நெஞ்சம் கனத்த தமிழர்களும் சிங்களவர்களும்

இலங்கையில் கவனம் ஈர்த்தது, தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நேற்று புதன்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் நினைவேந்தல் முன்னெடுத்தனர்.

தெற்கு திசையில் அமைந்து நெடுங்காலம் தமிழ்நாட்டிற்கு தென்றல் தந்து கொண்டிருந்த குமரிக்கண்டம்- ஆழிப்பேரலை, சிங்கள வருகையை அடுத்து சுடுகாற்றையே வீசி வந்தது இலங்கையாக. 

அதை மாற்றும் வகைக்கு பிரபாகரன் தலைமையில் தமிழீழம் காண முயன்ற பேரளவான தமிழ் மக்கள்மீது  04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5111: (2009.05.18) அன்று முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு சேனை சில பல நாடுகளின் தமிழர் விரோத ஒத்துழைப்போது, நடத்திய தாக்குதலில் தமிழர்கள் நூறாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இலங்கையின் வடக்கு மாகாண அவையில் நேற்றைய நாளதை இன அழிப்பு நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் காவல்துறையினர் மற்றும் சேனையினரின் தீவிர கண்காணிப்புகளுக்கு நடுவில் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் 13-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காலை 10.30 மணியளவில் தொடங்கியது. இந்த நினைவேந்தலில் தீப்பந்தத்தை இறுதி போரில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்றி வைத்தார். நினைவுத் தீபந்தம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அனைத்து சமுதாயத் தலைவர்கள் மற்றும் அரசியல் பேரறிமுகங்கள் அனைவரும் உயிரிழந்த மக்களுக்காக தீபந்தம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தலைநகர் கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் ஆண்டுதோறும் சேனை வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசால் நடைபெற்று வந்த நிலையில், அங்கு கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார சிக்கலை இலங்கை எதிர்கொண்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையோடு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு நடுவில் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் காலிமுகத் திடல் நினைவு தூண் அமைத்து போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தியதுடன் தொடர்ந்து கடலில் மலர் தூவி நினைவேந்தல் நிகழ்த்தினர். 
மேலும், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-ஆம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.