Show all

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச கைது

சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச உள்பட 5 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

 

இதுகுறித்து இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் அதிபர் ராஜபட்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபட்சவையும், அவருடன் 4 பேரையும் சனிக்கிழமை காலை நிதி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர் என்றார்.

 

இலங்கையில் விளையாட்டுகளை ஒளிபரப்பிவரும் சிஎஸ்என் தொலைக்காட்சியுடன் ராஜபட்ச மகன்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து யோஷிதவிடம் போலீஸார் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. கடற்படை அதிகாரியான யோஷித ராஜபட்ச உள்பட கைது செய்யப்பட்ட 5 பேரும் கதுவெலா நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் யோஷித ஆஜர்படுத்தப்பட்டபோது மஹிந்த ராஜபட்சவும் உடன் இருந்தார்.

 

முன்னதாக, இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்தபோது, சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியான நிஷாந்தா ரணதுங்க, யோஷித உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபட்சவுக்கு யோஷித, நமல், ரோஹித் என 3 மகன்கள் உள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.