Show all

நாடாளுமன்றத்துக்குள் மக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம்! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே கடந்த கடந்த மாதமும் அவசர நிலையை ஆளும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவளி ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். 

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் கட்டாயத்தேவைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே மூன்று கிழமைகளுக்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும், பல இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், இலங்கையில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றம் அருகே பல்கலைக் கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் தலைமைஅமைச்சர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வியாழக்கிழமை சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் செல்ல முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில், நாடு தழுவிய அளவில் தொழில்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், கடைகள், அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில், அலுவலகங்களுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று, கடைகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டக்காரர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். போக்குவரத்து மற்றும் தொடர்வண்டித்துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்ததால், முற்றிலுமாக போக்குவரத்து முடங்கியது. 

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர், மேலும் பத்து நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், கடந்த புதன்கிழமை பதிகை செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எந்த அறிவிப்பையும் பேரவைத்தலைவர் வெளியிடவில்லை. இதனால் அமளி ஏற்பட்டது.

இதன் காரணமாக, பேரவைத்தலைவர் அலுவலகத்தை முதன்மைக் எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சியினர் முற்றுகையிட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்கான நாளது அறிவிக்காவிட்டால், நாடாளுமன்றத்துக்குள் மக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே கடந்த கடந்த மாதமும் அவசர நிலையை ஆளும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.