Show all

கொட்டும் மழையில் தென்கொரிய தமிழர்கள் போராட்டம்! தாய் தமிழக மக்களுக்காக

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு தீர்வு வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தமிழக மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் இன்றுவரை உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன? இறந்த மக்களுக்கு என்ன தீர்வு வழங்கப்பட்டது? என எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நடுவண் மாநில அரசுகள் தெளிவாக உறுதி செய்யவில்லை என கூறிய தென்கொரிய வாழ் தமிழர்கள், கொரிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளனர்.

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள போசிங்கக் எனும் இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்குச் சரியான நியாயம் வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோல் மக்கள் மீது அடக்குமுறையை ஏவக்கூடாது என்றும் கண்டனக் முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும் தமிழகத்தில் தற்பொழுது திட்டமிட்டுள்ள சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை இயற்கைக்கும், உழவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்தால் அந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

இந்தப்போராட்டத்தில் தென்கொரியாவின் சியோல், சுவோன், பியோங்டேக், சின்ச்சாங், ஜோங்காக் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் பெண்கள், குழந்தைகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தென்கொரியாவில் தற்பொழுது கன மழை பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையிலும் குடையுடன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

தூங்குகிறவனை எழுப்பலாம்; தூங்குவதை போல நடிப்பவனை எழுப்ப முடியுமா என்பது பழமொழி. தமிழக, நடுவண் அரசுகள் அந்த வகையாக நடந்து கொள்ளும் போது, அவர்களை சீர்திருத்த முடியாது; ஆடுத்த ஆண்டு தூக்கி எறிவோம் என்று தமிழக மக்கள் உள்ளூர கருவிக் கொண்டிருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.