13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது. இந்தோனேசியாவில் நேற்று காலை 189 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என மீட்புக்குழு அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் லயன் ஏர் விமானம் நேற்று காலை பினாங் பகுதிக்கு புறப்பட்டது. 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனையடுத்து விமானத்தைத் தேடும் பணி தொடங்கியது. டேன்ஜுங் பிரியோக் துறைமுகப் பகுதியில் உள்ள ஜாவா கடலில் விமானம் விழுந்ததை சிலர் பார்த்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, அப்பகுதியில் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்யும் விதமாக உடைந்த பாகங்கள் கடலின் மேற்பரப்பில் கிடைத்துள்ளது. மேலும், தண்ணீரின் மேற்பரப்பில் எண்ணை படலம் பரவலாக இருந்துள்ளது. முதல்கட்டமாக கிடைத்த தகவல்களைக் கொண்டு விமானத்தில் இருந்த 189 பேரும் இறந்திருக்கலாம் என மீட்புக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.