Show all

பெருமிதம்! தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சிமொழிகளில் ஒன்று தமிழ்

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சிமொழிகளில் ஒன்று தமிழ் என்பதை பெருமிதமாகக் கொண்டாடும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. இந்த முன்னெடுப்பின் பின்னணியில் அமைந்த சான்றோர் பெருமக்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு அல்லது ஆசியான் என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். 

 

இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன 

 

அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன. 

 

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பகுதிகளில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வாய்ப்புகளை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முதன்மைக் குறிக்கோள்களில் அடங்குகின்றன.

 

இந்த ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் சதுர கிமீ நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3 விழுக்காடு ஆகும். இப் பகுதிகளின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8 விழுக்காடு ஆகும். ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். 

 

2011 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஒருங்கிணைந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது 2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது. ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும்.

 

ஆசியான் கூட்டமைப்பிற்கு முன்னர் தோற்றம் பெற்ற அமைப்பே 'தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு' ஆகும். இக் கூட்டமைப்பு பிலிப்பீன்சு, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கி 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரகத்தில் ஒன்றுகூடி 'ஆசியான் உறுதிஆவணத்தில்' கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பு 1967 ஆகத்து 8 இல் நிறுவப்பட்டது. 

 

இந்த ஆசியான் உறுதிஆவணமே (பிரகடனமே) பொதுவாக 'பாங்கொக் உறுதிஆவணம்' என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆடம் மாலிக், பிலிப்பீன்சின் நார்க்கிசோ ராமொஸ், மலேசியாவின் அப்துல் ரசாக், சிங்கப்பூரின் சி. இராசரத்தினம் மற்றும் தாய்லாந்தின் தனட் கோமன் ஆகிய இந்த ஐவரே இந்த உறுதிஆவணத்தில் கையெழுத்திட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்களாவார். இவர்களே இந்த ஆசியான் கூட்டமைப்பின் நிறுவனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

 

நோக்கங்கள்

ஆசியான் உறுதிஆவணத்தின்படி ஆசியான் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களாவன:

 

கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும் சமூக கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துதலும்.

நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் அவையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பகுதிகளில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துதல்.

தீவிர ஒத்துழைப்பு மற்றும் உடனொத்த (பரஸ்பர) உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.

கல்வி, தொழில், தொழில்நுட்ப, மற்றும் நிர்வாகத் துறைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல்.

அவர்களின் விவசாயம் மற்றும் கைத்தொழிற் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றில் கூடிய கவனமெடுத்தல்.

தென்கிழக்கு ஆசிய கற்கைநெறிகளை மேம்படுத்துதல்.

சமமான நோக்கங்களைக் கொண்ட பன்னாட்டு மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் நெருக்கமான நன்மைமிக்க உறவுகளை ஏற்படுத்துதல்.

 

தொடர்ந்த விரிவாக்கம்

புரூணை நாடானது 1 ஜனவரி 1984 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் ஒரு கிழமையில் 8 ஜனவரி 1984 இல் இக்கூட்டமைப்புடன் ஆறாவது உறுப்பினராக இணைந்துகொண்டதன் மூலம் இக் கூட்டமைப்பின் வளர்ச்சி தொடங்கியது. 28 ஜூலை 1995 இல் வியட்நாம் இக்கூட்டமைப்புடன் ஏழாவது உறுப்பினராக இணைந்துகொண்டது. வியட்நாம் இணைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் 23 ஜூலை 1997 இல் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டன. கம்போடியாவும் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொள்ள இருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டத்தின் காரணமாக இணைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் 30 ஏப்ரல் 1999 இல் கம்போடியா தனது அரசியல் உறுதிப்பாட்டின் பின்னர் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது.

 

1990 களில் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாடுகளுக்கிடையிலான மேலதிக ஒருங்கிணைப்பும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவின் பொருளாதாரக் குழுவை உருவாக்க மலேசியா தீர்மானித்தது. இதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களையும் சீனக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளையும் உள்ளடக்கி ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தலை முழு ஆசியப் பகுதியிலும் கட்டுப்படுத்துதலே இக் குழுவின் நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் வந்த அதிரடி எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும் அங்கத்துவ நாடுகள் மேலதிக ஒருங்கிணைப்பிற்குத் தமது பணியைத் தொடர்ந்து 1997 இல் ஆசியான் மற்றும் மூன்று எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

 

கிழக்குத் திமோரும் பப்புவா நியூ கினியாவும்

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் அதிகாரப்பாட்டு உச்சி மாநாட்டின் போது கிழக்குத் திமோர் ஆசியான் கூட்டமைப்பில் பதினோராவது அங்கத்தவராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பக் கடிதத்தைக் கையளித்தது. இந்தோனேசியா கிழக்குத் திமோருக்கு இதயங்கனிந்த வரவேற்பை தெரிவித்தது.

 

பப்புவா நியூகினியா 1976 ஆம் ஆண்டு பார்வையாளர் தகுதியைப் பெற்றுக்கொண்டதுடன் 1981 ஆம் ஆண்டில் சிறப்புப் பார்வையாளர் தகுதியைப் பெற்றுக்கொண்டது. பப்புவா நியூகினியா ஒரு மெலனேசியன் அரசாகும்.

 

சுதந்திர வணிகம்

2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசதந்திர உறவுகளின் 30 ஆண்டு நிறைவையும் கொண்டாடியது. 

 

2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வணிக உடன்பாடுகளை ஏற்ப்டுத்திக் கொள்வதென 26 ஆகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

 

27 பெப்ரவரி 2009 இல் சுதந்திர வணிக ஒப்பந்தம் ஒன்று ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சுதந்திர வணிக ஒப்பந்தமானது 12 நாடுகளினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2000 தொடக்கம் 2020 வரையான ஆண்டுகாலப் பகுதியில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களால் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

 

ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளும் அவர்களின் ஆறு பெரிய வர்த்தகப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 26-28 பெப்பிரவரி 2013 காலப்பகுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் பகுதி பரந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல்களைத் தொடங்கினர்.

 

 

அடிப்படை கோட்பாடுகள்

சுதந்திரம், இறைமை, சமத்துவம், பகுதிய ஒருமைப்பாடு, மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் தேசிய அடையாளங்களின் மீதான உடனொப்பு (பரஸ்பர) மரியாதை.

வெளித் தலையீடு, நாசவேலை அல்லது பலாத்காரத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய தேசிய இருப்புக்கு வழிவகுத்தல் ஒவ்வொரு அரசினதும் உரிமை.

மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை.

அமைதியான முறையில் வேறுபாடுகள் அல்லது பிணக்குகளை தீர்த்தல்.

படை அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை நிராகரித்தல்.

அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் திறமையான ஒத்துழைப்பு.

விமர்சன வரவேற்பு

ஆசியான் வழி அமைப்பின் உருவாக்க நிலைகளின் சூழ்நிலை சமகால அரசியல் யதார்த்தத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

 

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பால் நடாத்தப்படும் கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஆசியான் உச்சி மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பகுதியச் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கவும் அவற்றைத் தீர்க்கவும் சந்தித்துக்கொள்வதோடு, ஆசியான் பகுதிகளுக்குள் உட்படாத வேற்று நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வெளிநாடுகளுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர்.

 

ஆசியான் தலைவர்களின் அதிகாரப்பாட்டு உச்சி மாநாடு முதன்முதலாக இந்தோனேசியாவின் பாலி நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசியானின் மூன்றாவது அதிகாரப்பாட்டு உச்சி மாநாடு பிலிப்பைன்சின் மணிலா நகரில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. 

 

அந்த மாநாட்டில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைபின் அரசுத் தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நான்காவது அதிகாரப்பாட்டு உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள விருப்பமும் சம்மதமும் தெரிவித்ததையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியான் உச்சி மாநாடுகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

 

அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், இப்பகுதிகளில் தாக்கம் செலுத்தும் அவசரப் பிரச்சினைகளை குறிப்பிடுவதற்காக ஆண்டாண்டு சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரப்பாட்டு உச்சி மாநாட்டை தமது பெயரின் அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடாத்த உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துக்கொண்டன. 

 

ஆனால் பர்மா நாடானது ஐக்கிய அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் ஆசியான் அதிகாரப்பாட்டு உச்சி மாநாட்டை நடாத்தும் உரிமையை 2004 ஆம் ஆண்டில் இழந்தது.

 

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து ஆசியான் அதிகாரப்பாட்டு உச்சி மாநாட்டை ஆண்டிற்கு இருமுறை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

 

ஆசியான் அதிகாரப்பாட்டு உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். மாநாட்டின் வழக்கமான நடைமுறைகள் பின்வருமாறு:

 

உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் உள்ளக அமைப்பு கூட்டமொன்றை நடத்துவார்கள்.

உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆசியான் பகுதிய மன்றத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் மாநாடொன்றை நடாத்துவார்கள்.

ஆசியான் மற்றும் மூன்று எனப்படும் கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மூன்று கலந்துரையாடல் கூட்டாளிகளான சீன மக்கள் குடியரசு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.

ஆசியான் - சிஇஆர் எனப்படும் தனியான கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு கலந்துரையால் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.

 

கிழக்கு ஆசிய அதிகாரப்பாட்டு உச்சிமாநாடானது ஆசியான் கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு ஆசியா மற்றும் அப்பகுதியங்களில் 16 நாடுகளை உள்ளடக்கி ஒவ்வொரு அண்டும் கூட்டப்படும் ஒரு பரந்த ஆசிய அமைப்பாகும். இந்த உச்சிமாநாடானது வர்த்தகம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் பகுதிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் நடத்தப்படுகின்றது.

 

ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களான 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே இந்த உச்சிமாநாட்டின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை அண்ணளவாக உலகின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். 

 

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் அதிகாரப்பாட்டு உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் அதிபர்களுடன் அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள அதிகாரப்பாட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடொன்றினால் ஆசியான் கூட்டமைப்பிற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் ஒரு மைல்கல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொருட்டு நடாத்தப்படும் மாநாடே ஞாபகார்த்த உச்சிமாநாடு எனப்படும். இம் மாநாட்டை நடாத்தும் நாடு இந்த மாநாட்டிற்கு ஆசியான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை பற்றிக் கலந்துரையாடும்.

 

ஆசியான்-ஜப்பான் ஞாபகார்த்த உச்சிமாநாடு சப்பான் டோக்கியோ 11, 12 டிசம்பர் 2003- ஆசியானுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உறவு தொடங்கப்பட்டு 30 ஆவது ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்பட்டது. இந்த மாநாடே ஆசியானுக்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் நடாத்தப்பட்ட முதலாவது ஆசிய உச்சிமாநாடாகும்.

 

ஆசியான்-சீனா ஞாபகார்த்த உச்சிமாநாடு, ஆசியான்-கொரியக் குடியரசு ஞாபகார்த்த உச்சிமாநாடு, ஆசியானுக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையில் உறவு தொடங்;கப்பட்டு 20 ஆவது ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு ஒரு மாநாடு நடாத்தப்பட்டது.

 

ஆசியான்-இந்தியா ஞாபகார்த்த உச்சிமாநாடு இந்தியா புது தில்லி- 20, 21 டிசம்பர் 2012 ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவு தொடங்;கப்பட்டு 20 ஆவது ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்பட்டது.

 

ஆசியான் பகுதிய அமைப்பு என்பது ஆசிய பசுபிக் பகுதியத்தில் இயங்கும் முறையான, அதிகாரப்பாட்டு, பன்முக அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வமைப்பில் 27 நாடுகள் அங்கத்துவம் வகித்தனர். உரையாடல்களையும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் பகுதியத்தில் முன்னெச்சரிக்கை அரசதந்திரத்தைக் கடைப்பிடித்தல் என்பன ஆசியான் பகுதிய அமைப்பின் நோக்கங்களாகும். 

 

ஆசியான் பகுதிய அமைப்பின் சந்திப்பு முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வமைப்பின் தற்போதைய அங்கத்தவர்கள் பின்வருமாறு: ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மொங்கோலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பப்புவா நியூகினியா, ரஷ்யா, கிழக்குத் திமோர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை.

 

வேறு சந்திப்புக்கள்

மேற்குறிப்ப்டப்பட்ட கூட்டங்களுக்கு மேலதிகமாக ஏனைய வழக்கமான சந்திப்புக்களும் நடாத்தப்படுகின்றன. இவற்றுள் ஆசியான் அமைச்சர்கள் கூட்டமும் ஏனைய சிறிய கூட்டங்களும் உள்ளடங்கும். இக் கூட்டங்கள் பொதுவாக பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழலைப் பற்றி அமைந்திருப்பதுடன் இக்கூட்டங்களில் அரசுத் தலைவர்களுக்குப் பதிலாக அமைச்சர்களே கலந்துகொள்வார்கள்.

 

ஆசியான் மற்றும் மூன்று என்பது ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்து நடாத்தும் ஒரு மாநாடாகும். இது ஒவ்வொரு ஆசியான் அதிகாரப்பாட்டு உச்சிமாநாட்டின் போதும் முக்கிய நிகழ்வாக நடைபெறும். 

 

இன்றுவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் சுதந்திர வணிகப் பகுதியை உருவாக்கவில்லை. சுதந்திர வணிகப் பகுதியை உருவாக்குதல் குறித்த கூட்டமானது 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்றது.

 

ஆசியா-ஐரோப்பா சந்திப்பு

ஆசியா-ஐரோப்பா சந்திப்பு ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் கூட்டுறவைப் பலப்படுத்தும் முகமாக 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுpறப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இச்சந்திப்பு தொடங்கப்பட்டது. 

 

ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக 45 பங்காளர்களில் ஒருவரான செயலாளர் கலந்துகொள்வார். அத்தோடு இச்சந்திப்போடு இணைந்து நடக்கும் ஆசியா - ஐரோப்பா அறக்கட்டளை என்ற சமூக கலாச்சார அமைப்பின் கூட்டத்திலும் ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக ஒரு பேராளர் அரசாங்க குழுவில் நியமிக்கப்படுவார்.

 

ஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு

ஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு என்பது ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் ஆண்டாண்டு நடைபெறும் ஒரு சந்திப்பாகும்.

 

ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 44 ஆவது ஆண்டாண்டு சந்திப்பானது 16 ஜூலை 2011 தொடக்கம் 23 ஜூலை 2011 வரை பாலி நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இந்தோனேசியா ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் குடிமக்களுக்கு ஆசியான் பகுதியங்களுக்குள்ளான பயணங்களுக்கு ஒன்றுபட்ட ஆசியான் பயண வருகைஇசைவை (விசாவை) முன்மொழிந்தது. 

 

45 ஆவது ஆண்டாண்டு சந்திப்பானது கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்றது. தென் சீனக் கடலின் உரிமை தொடர்பான சீனா மற்றும் அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட கருத்து முரண்டாடுகள் காரணமாக ஆசியான் கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இச்சந்திப்பின் முடிவில் அரசதந்திர அறிக்கை அமைப்பினால் வெளியிடப்படவில்லை.

 

ஆசியான் கூட்டமைப்பின் உறுதியான பகுதிய கூட்டுறவிற்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய மூன்று தூண்களாக பாதுகாப்பு, சமூக கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு என்பன உள்ளன. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு ஆசியான் பொருளாதார சமூகத்தை உருவாக்கின.

 

வெளிநாட்டு நேரடி முதலீடு

2009 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பின் வெளிநாட்டு நேரடி முதலீடானது 37.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகி 75.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. ஆசியான் கூட்டமைப்பின் 22 விழுக்காட்டு வெளிநாட்டு நேரடி முதலீடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்றது. அடுத்ததாக 16 விழுக்காடு ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளிடமிருந்தும் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்தும் கிடைக்கப் பெறுகின்றது.

 

உள்ளார்ந்த ஆசியான் பயணம்

ஆசியான் நாடுகளிடையே இலவச வருகைஇசைவு சேவை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதால் உள்ளார்ந்த ஆசியான் பயணங்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் ஆசியான் அங்கத்துவ நாடுகளின் சுற்றூலாப் பயணிகளின் எண்ணிக்கையான 73 மில்லியனில் 47 விழுக்காடு அல்லது 34 மில்லியன் சுற்றூலாப் பயணிகள் வேறோர் ஆசிய நாட்டிலிருந்து வந்தவர்களாவார்கள்.

 

உள்ளார்ந்த ஆசியான் வணிகம்

2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியின் வரையில் உள்ளார்ந்த ஆசியான் வணிககமானது மிகக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகின்றது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஆசியான் கூட்டமைப்பினுள் உள்ளடங்காத நாடுகளுக்கே அதிகமாக எற்றுமதியை மேற்கொண்டன. எனினும் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுள் தமது ஏற்றுமதியில் லாவோஸ் 80 விழுக்காட்டையும் மியான்மார் 50 விழுக்காட்டையும் வேறோர் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாட்டுக்கு எற்றுமதி செய்தன.

 

ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாணியிலான சமூகத்தை நோக்கி நகரும் நோக்குடன் கையெழுத்திட்ட ஆசியான் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொருட்டு 15 டிசம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஒன்றுகூடினார்கள். இந்த ஆசியான் சாசனம் ஆசியான் கூட்டமைப்பை ஒரு சட்ட அமைப்பாக மாற்றியதுடன் 500 மில்லியன் மக்கள் சூழ்ந்துள்ள இப்பகுதியத்தில் ஒரு சுதந்திர வணிகப் பகுதியை உருவாக்குதல் அதன் இலக்காக அமைந்தது.

 

கலாசார நடவடிக்கைகள்

ஆசியான் பகுதியத்தை மேலும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆசியான் கூட்டமைப்பு பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இவற்றுள் விளையாட்டுக்கள், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுடன் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் உள்ளடங்குகின்றன. ஆசியான் பல்கலைக்கழக வலையமைப்பு, ஆசியான் உயிர்ப் பல்வகைமைக்கான மையம், ஆசியான் சிறந்த விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்பவியலாளர் விருது, சிங்கப்பூரின் அனுசரணையில் வழங்கப்படும் ஆசியான் உதவித்தொகை என்பன இவற்றிற்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 

கல்வி மற்றும் மனித மேம்பாடு:

பொதுவாக எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். ஆசியான் நாடுகளில் ஆறு நாடுகள் 2000 ஆம் ஆண்டளவில் 100 விழுக்காட்டை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளன. 1990 களில் ஏற்படுத்தப்பட்ட கட்டாயத் தொடக்க கல்வியே இந்த எழுத்தறிவு வளர்ச்சிக்குக் காரணமாகும்.

 

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் பொதுவாக எஸ்.ஈ.ஏ விளையாட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்கு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழும் நடைபெறுகின்றன.

 

ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்பது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியாகும். இது ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களின் பின்னரும் நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்கள் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பின்னர் தோற்றம் பெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளும், கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் பங்குபற்றுகின்றனர்.

 

ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்:

ஆசியான் கால்பந்து வெற்றிக்கிண்ணம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பினால் நடாத்தப்படுவதுடன் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகாரம் பெறப்பட்டவையாகவும் உள்ளன. இப்போட்டிகளில் தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் காற்பந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் 1996 ஆம் ஆண்டு டைகர் கிண்ணம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் பின்னர் ஆசிய பசிபிக் பிரெவெரீஸ் நிறுவனத்தின் அனுசரணை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 

 

ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தோனேசியாவின் லம்பொக் நகரில் நடத்திய சந்திப்பை அடுத்து 2030 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்தை நடத்தும் உரிமையை ஒரு தனி அமைப்பாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.

 

ஆசியான் 2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காற்பந்தை நடாத்த அதன் முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,196.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.