Show all

இலங்கையில் இருந்து தப்பியோடும் திட்டத்தில் ராஜபக்சே!

இலங்கையின் பதட்டமான சூழலுக்கு நடுவே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியானதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த பதட்டமான சூழலுக்கு நடுவே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, தலைமைஅமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில, இலங்கையில் நேற்று வன்முறை பேரளவாக வெடித்தது.

தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். 

இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சேனை களம் இறக்கப்பட்டதால் இலங்கை முழுவதும் பதட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் பொலன்னருவாவை சேர்ந்த ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகொரலா, போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது பாதுகாவலரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவர்கள் இருவரின் உடலும் மீட்கப்பட்ட நிலை யில், இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொழும்பு உட்பட பல இடங்களில் நடந்த வன்முறை நிகழ்வுகளில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் சேனையின் வன்முறை முன்னெடுப்புகளால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அந்தவகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் மொத்த வீடும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது.

ஆளுங்கட்சியை சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளும் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவும் வன்முறை நீடித்தது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் நடந்த கலவரத்தின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் காவல்துறை தரப்பில் ஒருவர் உயிரிழந்தார். இமதுவா பகுதி அவையின் தலைவர் ஏ.வி.சரத் குமாரின் வீட்டை பொது மக்கள் தாக்கியதில், படுகாயமடைந்த அவர், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு இறந்தார். மகிந்த ராஜபக்சே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக நேற்றிரவு அரசிதழில் அதிகாரபாடாக வெளியிடப்பட்டது.

இலங்கை முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், தலைமை அமைச்சருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் அந்த சொகுசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே, வேறு ஒரு கமுக்க இல்லத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டு இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

கலவரத்துக்கு காரணமான ராஜபக்சே, தப்பிச் செல்லும்போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அவரது நடவடிக்கைகள் கமுக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கலவர நிகழ்வுகள், தலைமைஅமைச்சர் பதவி விலகல், மக்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், 'இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து விவாதிக்க, இந்தக் கிழமையே நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாளை நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், அதிபருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக ஒப்புதல் பெறப்படும். அதிபர் கோத்தபயவால் பிறப்பிக்கப்படும் அவசர நிலை பிரகடனத்திற்கு, முறையாக நாடாளுமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அரசியலமைப்பின்படி அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்படவேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறப்படாத பட்சத்தில், 10 நாட்களில் அந்த அவசரநிலை சட்டம் தானாகவே செல்லாததாகி விடும். அடுத்த கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளதால், அது வரையான நாட்களுக்கு அவசர நிலை சட்டத்தின் மூலமான அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருக்க கோத்தபய திட்டமிடுகின்றார்' என்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், பேரவைத்தலைவர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி, புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஆராய நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நாட்டின் காவல் துறை தலைவர் விக்ரமரத்ன மற்றும் இலங்கை சேனைத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோருக்கு கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. நாறை மறுநாள் மேற்கண்ட இருவரும், மனித உரிமை ஆணையம் முன் அணியமாகி விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,244.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.