Show all

பதவி இழந்தார் இம்ரான்கான்! வென்றது நம்பிக்கையில்லா தீர்மானம்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் தலைமைஅமைச்சர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய தலைமைஅமைச்சர் யார் என்பது நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பனிரெண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. 

தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. அதன் காரணமாக இந்தப்பாட்டில் பாகிஸ்தான் உச்ச அறங்டுகூற்றுமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

வழக்கின் முடிவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது அறங்கூற்றுமன்றம். 

அதன்படி, நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் பதவி விலகியதாகச் சொல்லப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்கவே, அவர்கள் பதவி விலகியதாகத் தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்நாட்டு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு விசாரணையை தொடங்கப்படும் என அறங்கூற்றுவர்கள் எச்சரித்தனர். 

நள்ளிரவு எந்த நேரம் ஆனாலும் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு விசாரணையை செய்யத் தயார் என அறங்கூற்றுவர்கள் அறிவிக்க, கைதை தவிர்க்க நள்ளிரவு 12 மணிக்கு 10 மணித்துளிகளுக்கு முன் வாக்குப்பதிவு நடத்த பாராளுமன்றத் தலைவர் அசாத் கைசர் ஒப்புக்கொண்டார்.

இதன்பின்னும், அடுத்தடுத்து ஒத்திவைப்பு, விவாதம் என வாக்கெடுப்பு தள்ளிக்கொண்டே போனது. பாராளுமன்றத் தலைவர் அடிக்கடி இம்ரான்கானைச் சந்தித்து ஆலோசனை நடத்திக்கொண்டே இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி முழக்கமிடத் தொடங்கினர். 
ஒருபக்கம் நாடாளுமன்ற காட்சிகள் இப்படி இருக்க, மறுபுறம் இஸ்லாமாபாத் விமான நிலையம் சேனைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த முதன்மைத் தலைவர்கள் விமான நிலையம் வருவதென்றால் அரசின் தடையில்லாச் சான்று வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்ரான் கட்சியின் தொண்டர்கள் சில மணித்துளிகளில் நாடாளுமன்ற வாசலில் குவிந்தனர். இப்படியான நாடகங்கள் அடுத்தடுத்து அரங்கேறி பாகிஸ்தானை நள்ளிரவு விழிக்க வைத்தன.

இதனிடையே, நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிபோல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதன்மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் தலைமைஅமைச்சர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய தலைமைஅமைச்சர் யார் என்பது நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,214.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.