Show all

8700 கோடி வணிகம் சார்ந்தது! பாஜக பேரறிமுகரின் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகளின் எதிர்விளைவு

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகளின் 8700 கோடி வணிகம் சார்ந்த எதிர்விளைவுகள் இந்தியாவை பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக வல்லுநர்களால் எச்சரிக்கப்படுகிறது.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருவதாக இஸ்லாமிய நாடுகள் புகார் வைத்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகளின் இந்த புகார் காரணமாக இரண்டு தரப்பு உறவு பாதிப்படையும் அபாயம் உள்ளது. 

பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவரின் பேச்சு உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத சொல்லாடலை வீசி இருந்தார். இவரின் பேச்சை கத்தார் கடுமையாக விமர்சனம் செய்தது. கத்தார் சார்பாக இந்தியாவிற்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்தப்பாட்டை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. 

இதையடுத்து இந்திய ஒன்றிய பாஜக அரசு சார்பிலும், அது அரசின் அதிகாரப்பாட்டு கருத்து கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஈரான் குவைத் கத்தார் மட்டுமின்றி இந்தியாவை ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்திய தரப்பில் இருந்து விளக்கம், நடவடிக்கை ஆகியவை தேவை என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. 

இந்த மோதல் காரணமாக இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் உறவு பாதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா ஜிசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு குழுவுடன் மிக அதிக அளவில் வணிகம் செய்து வருகிறது. குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளுடன் இந்த வணிகத்தை மேற்கொண்டு வருகிறது. 

இந்த வளைகுடா ஒத்துழைப்பு குழு நாடுகளுடனான இந்திய வணிகம் என்பது எட்டாயிரத்து எழுநூறு கோடி டாலர் ஆகும். இந்திய மதிப்பில் ஆறு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து எண்ணூற்று அறுபது கோடி ரூபாய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வணிகம் உயர்ந்து வருகிறது. 

அதோடு கத்தார் உள்ளிட்ட நாடுகளில் கேரளாவை சேர்ந்த 35 லட்சம் பேர் உட்பட பல லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இந்தியாவின் முதன்மை எண்ணெய் இறக்குமதி தேவையை நிறைவு செய்வது இந்த வளைகுடா ஒத்துழைப்பு குழு நாடுகள்தாம். 

இதனால்தான் மோடி அடிக்கடி வளைகுடா ஒத்துழைப்பு குழு நாடுகளுக்கு சென்று சந்திப்பு நடத்தி வருகிறார். ஐக்கிய அரபு நாடுகளுடன் இந்தியா இலவச வணிக ஒப்பந்தம் செய்தது கூட இதற்குத்தான். அத்துடன் இரு தரப்பு உறவை பறைசாற்றும் விதமாக அபு தாபியில் நான்கு ஆண்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஹிந்து கோவிலின் திறப்பு விழாவிற்கு கூட சென்று வந்தார். 

அந்த அளவிற்கு இந்தியா - இஸ்லாமிய நாடுகள் இடையே உறவு உள்ளது. ஆனால் இப்போது ஏற்பட்டு இருக்கும் சிக்கல் காரணமாக வளைகுடா ஒத்துழைப்பு குழுநாடுகள் - இந்தியா இடையிலான உறவை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வெளியுறவுத்துறை இருக்கிறது. பல மில்லியன் டாலர் வணிகம் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஜிதேந்தர் நாத் மிஸ்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இந்தியா மிக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. மேலிட தலைவர்களின் சந்திப்புகள், அவர்களின் முயற்சிகள் மட்டுமே இந்தச் சிக்கலைச் சரி செய்ய உதவும். மிகவும் அபாயகரமான விடையம் இது என்று முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி அணில் ட்ரிங்குனாயத் தெரிவித்துள்ளார். 

இரு தரப்பு உறவில் சிக்கல் ஏற்பட்டால் அது இந்தியாவைத்தான் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுவாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் கருத்து தெரிவித்தால் அதை இந்தியா கடுமையாக எதிர்க்கும். மாறாக இந்தியா இந்த முறை கிட்டத்தட்ட சரண் அடைந்தது போல் இறங்கி சென்றுள்ளது. இந்தியா இப்படி இறங்கி செல்வதற்கு காரணம், சிக்கல் கையை மீறி போனதால்தான். 

வளைகுடா ஒத்துழைப்பு குழு நாடுகளுடன் உறவை சேதப்படுத்த இந்திய ஒன்றிய பாஜக அரசு நினைக்கவில்லை. இதனால்தான் இந்தியா இறங்கி போய் உள்ளது என்றும் வெளியுறவுத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப்பாட்டை இஸ்லாமிய நாடுகளும் அவ்வளவு எளிதில் விடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அரபு நாடுகளில் இருக்கும் மக்கள் இந்தியாவின் நிலவும் இஸ்லாமிய வெறுப்பை விரும்பவில்லை. பணக்கார ஷேக்குகள் பலர், இந்தியாவில் நிலவும் இந்த விடையங்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். தங்கள் நாட்டு அரசும் இந்தியாவை கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். வளைகுடா ஒத்துழைப்பு குழு நாடுகளில் செய்தி காட்சிமடைகள் முழுக்க இந்திய எதிர்ப்பு கருத்துக்களே நிரம்பி வழிகின்றன, இதனால் வளைகுடா ஒத்துழைப்பு குழு நாடுகளும் கண்டிப்பாக இந்தியாவை தொடர்ந்து எதிர்க்கும். இதை இந்தியா கவனமாக சமாளிக்க வேண்டும் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் களம் இறக்கி இருக்கிற சில்லுவண்டு தலைவர்களைப் போலவே அனைத்து மாநிலங்களிலும் நூபுல் சர்மா போன்ற சில்லுவண்டு அடாவடிகளைக் களம் இறக்கியுள்ளது. சமூக வலைதளங்களிலும் நிறைய சில்லுவண்டு கூலியாட்களை அமர்த்தி இஸ்லாமிய வெறுப்பை விதைத்து வருகிறது. இவைகளின் தாக்கம் உலக அளவில் எதிர்விளைவுகளை பிரதிபலித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பாஜக அடாவடிச் சில்லுவண்டுகள் மேடையில் அருவருப்புகளை அள்ளி வீசாமல் இருக்க வாய்களையும், சமூக வலதளங்களில் புளுகுகளையும் ஆபாச சொல்;லாடல்களையும் வாரி இறைக்காமல் இருக்க கைகளையும் கொஞ்ச காலத்திற்கு பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் கட்டிப்போடுவது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,272.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.