Show all

குறளிச்செலாவணி ஆர்வலர்கள்! தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ, அலைகழிப்பு வேண்டாமே

இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீடுகளுக்குத் தடையா அல்லது அனுமதியா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நடுவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நடுத்தட்டு மக்கள் எந்த புதியவரவிலும் களம் இறங்குவார்கள், விழுந்தாலும் எழுவார்கள். அப்படித்தான் அறங்கூற்றுமன்றம் குறளிச்செலாவணிக்கு தடை விலக்கியதும், அலைஅலையாய் அதிலாவது கூடுதல் ஆதாயம் பார்க்க முடியுமா என்று களம் இறங்கியுள்ளார்கள்.

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கிற எல்லா சட்ட நடவடிக்கைகளும் இந்த நடுத்தட்டு மக்களையே குறி வைப்பதானது என்பதை நாம் அனுபவத்தில் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு பணமதிப்பிழப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நடுத்தட்டு மக்களே. 

குறளிச்செலாவணி மற்றும் ஒழுங்குமுறை சட்டம், மூலம் இந்தியாவின் அதிகாரப்பாட்டு குறளிச்செலாவணி உருவாக்கப்பட இருப்பதாகவும், அதை இந்தியக் கட்டுபாட்டு வங்கியின் சொந்தக் குறளிச்செலாவணியாக வெளியிடுவதற்கு ஒன்றிய அரசு திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசு, தனியார் குறளிச்செலாவணி முதலீட்டைத் தடை செய்யப்போவதாகவும், இதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை வருகிற குளிர்காலக் கூட்டத்தொடரில் பதிகை செய்யப் போவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இன்று, குறளிச்செலாவணிகள் இந்தியாவில் தடை செய்யப்பட மாட்டாது என்றும், அதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த விடையங்கள் விரைவில் அரசால் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட சில குறளிச்செலாவணிகளுக்கு மட்டும் தடை இருக்காது என்றும், அவற்றை செயல்படுத்த அரசு அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த கிழமை இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி குறளிச்செலாவணி முதலீடு குறித்து முதல் முறையாக பேசியபோது, இளைஞர்களை சீரழிக்கும் முதலீடாக குறளிச்செலாவணி முதலீடு மாறிவிடக்கூடாது. இளைஞர்களைத் தவறான பாதைக்கு கொண்டு செல்லும் தீயவர்களின் கையில் குறளிச்செலாவணி போய்விடக்கூடாது. இந்த விடையத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றெல்லாம் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். 

கூகுள் தேடுபொறிக்கே அனுமதியில்லாத, சீன அரசு குறளிச்செலாவணி முதலீட்டுக்கு முற்றிலுமாக தடை விதித்திருக்கிறது. அதே போல, ரஷ்யா, மொராக்கோ, எகிப்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் குறளிச்செலாவணியை முற்றிலுமாக தடை செய்திருக்கின்றன. 

இந்நிலையில், இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீடுகளுக்குத் தடையா அல்லது அனுமதியா அல்லது இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியின் புதிய குறளிச்செலாவணி அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நடுவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக பல குறளிச்செலாவணியின் விலை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக, முதன்மைக் குறளிச்செலாவணியாகக் கருதப்படும் பிட்காசுவின் விலை இம்மாத தொடக்கத்தில் 69,000 டாலராக இருந்தது. அது தற்போது 56,920 டாலராக சரிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,000 டாலருக்கு மேல் சரிந்துள்ளது.

இந்திய அரசு கொரோனா நிதிக்கு நன்கொடையாக வந்திருந்ததான- செய்திக்குச் சொந்தமான, கடந்த சில மாதங்களாக- அதிக விலை ஏற்றத்தை சந்தித்து வந்த சிபா இனு என்கிற குறளிச்செலாவணி இன்று ஒரே நாளில் மட்டும் 8விழுக்காடு வரை விலை குறைந்து 0.000039 டாலருக்கு வர்த்தகமாகிறது. 

அதே போல பெரும்பாலான குறளிச்செலாவணி முறிகளும் 25 விழுக்காடு வரையிலான விலை வீழ்ச்சியைச் சந்தித்தன.

சட்டம் எதுவானாலும் சரியே! அலைகழிப்பு வேண்டாம் ஐயா. தடையோ அல்லது கட்டுப்பாட்டு விதிமுறைகளோ- எது சொன்னாலும் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க என்பதுதான் இந்திய குறளிச்செலாவணி முதலீட்டாளர்களின் தற்போதைய மனநிலை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.