Show all

தமிழர்களுக்கு கூடுதல் சமய,கலாச்சாரப் பாதுகாப்பு, கூடுதல் அதிகாரம்! புதியதாக பதவியேற்றுள்ள மலேசிய அரசில்

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலைச் சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

15ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசிய தலைமை அமைச்சராகப்  பதவியேற்றுள்ளார். தற்போது 92 அகவையுள்ள மகாதீர்தான் உலக நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களிலேயே அதிக அகவையுடையவர்.

பிரிட்டனிடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றதில் இருந்து ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி முதல் முறையாக இந்தத் தேர்தலில் அதிகாரத்தை இழந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான நம்பிக்கை கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

மலேசிய அரசின் தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சுமார் 8விழுகாடும் அந்த 8விழுக்காட்டு பேரில் 95விழுக்;காட்டு பேர்கள் தமிழர்கள். மலேசியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் மக்கள் ஓசை இதழின் ஆசிரியருமான மோகனன் பெருமாள், இந்தத் தேர்தலில் இன, மத எல்லைகளைக் கடந்து மலேசிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் இது ஓர் ஆரோக்கியமான சூழல் என்றும் கூறினார்.

இதுவரை தமிழர்களின்  பிரச்சனைகளுக்காக தமிழர் கட்சி, சீனர்களின் பிரச்சனைகளுக்கான சீனக் கட்சி, மலாய்காரர்களின் பிரச்சனைகளுக்காக மலாய் கட்சி எனும் நிலை இருந்தது. இனிமேல் இவர்களில் யாருக்கு பிரச்சனை என்றாலும் அது ஒட்டுமொத்த மலேசிய மக்களின் பிரச்சனையாகப் பார்க்கப்படும் என்றார்.

சில தமிழ் வேட்பாளர்கள் 40 ஆயிரம், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஒரு தொகுதியில் தமிழர்களின் எண்ணிக்கையே அவ்வளவு இருக்காது. சராசரியாக ஒரு தொகுதியில் 2,000 முதல் 5,000 தமிழர்களே இருப்பார்கள். அதிகபட்சமாக 10,000 பேர் இருப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்றார் மோகனன் பெருமாள்.

மலேசிய வரலாற்றிலேயே மிகவும் குறைந்த அகவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 22 அகவை இளைஞரான பிரபாகரன் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் முடிவு குறித்து பேசிய, நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி, 10ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த அரசியல் சுனாமி தற்போது வீசியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 6-7 என்ற அளவில்தான் இருக்கும். அந்த எண்ணிக்கை இப்போது இரண்டு மடங்காகியுள்ளது என்று கூறினார்.

மலேசியாவில் 61 ஆண்டுகளாக இன, மத அடிப்படையில் நடந்த ஆட்சியால் தமிழர்களுக்கு பாதிப்பு உண்டாகியுள்ளதாகக் கூறும் அவர், புதிய அரசு தமிழர்களுக்கு சமய மற்றும் கலாசார பாதுகாப்பையும் உண்டாக்கும் என்று தெரிவித்தார்.

இதுவரை மலேசியா இனம், சமயம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆளப்பட்டு வந்தது. அதனால் சிறுபான்மையினருக்கு இயல்பாகவே போதிய தலையாயத்துவம் கொடுக்கப்படவில்லை. வணிக வாய்ப்புகள், உயர்கல்வி ஆகியவற்றில் தமிழர்களுக்கு குறைந்த அளவே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இனிமேல் அவற்றில் தமிழர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்க புதிய அரசு பரிசீலனை செய்யும் என்று இந்தத் தேர்தலுக்கு பிந்தைய மாற்றங்கள் குறித்து ராமசாமி கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.