Show all

தாய்லாந்து குகையில்! சாதனை முயற்சியில் ஈடுபட்டு சோதனையில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்த பதினொன்றிலிருந்து பதினாறு அகவை வரையிலான சிறுவர்கள், தாய்லாந்து  லுவாங் குகையை சுற்றிப் பார்க்க பத்து நாட்களுக்கு முன்பு உள்ளே சென்றனர்.

அவர்களுடன் சென்ற 25 அகவை துணை பயிற்சியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், அந்த சிறுவர்களை அந்த குகைக்கு அழைத்து சென்றிருந்தார்.

அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பாமல், காணாமல் போன செய்தி நாட்டையே உலுக்கியது; மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப் பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டினர்.

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்து குகைக்குச் சென்றவர்கள் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதை ஊடகங்களிடம் அந்நாட்டு ராணுவ ஜெனரல் பஞ்சா துரியப்பன் தெரிவித்தார்.

ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் ஒன்று அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு விநியோகம் செய்யப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது. இதுவரை நாங்கள் அவர்களை கண்டறிந்துள்ளோம். அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவது என ஆளுநர் தெரிவித்தார்.

குகையிலிருந்து நீரை வற்ற வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுப்பி சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாக தெரிவித்த ஆளுநர், சிறுவர்களின் உடல் நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வரை அவர்களை கண்காணிப்போம் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.