Show all

இன்று செருமானிய மக்கள் இருவேறு தத்துவங்களின் மீது வெற்றி கொண்ட நாள்! பெர்லின் சுவரின் வீழ்ச்சி நாள் என்கிறது உலகம்

இன்றைய நாளை பெர்லின் சுவரின் வீழ்ச்சி நாள் என்கிறது உலகம். உண்மையில், அந்த வீழ்ச்சியில் கிடைத்ததோ செருமானிய மக்களுக்கு இருவேறு தத்துவங்களிலிருந்து விடுதலை. இயற்கை போற்றலுக்கு பொங்கல்விழா கொண்டாடும் தமிழர்களாகிய நாம், தத்துவ ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்ற “செருமானிய மக்களுக்கான தத்துவ ஆதிக்க விடுதலை நாள்” என்றே பேசுவோம். 

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: செர்மனி ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. செர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த நலங்குத்துறை முறைமையையும் கொண்டுள்ளது. செர்மனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் மிகச் சிறப்பானதாகும்.

செர்மனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவதாக இடம்பெறும் பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. செர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. 

இந்த பெருமைக்குரிய செருமானியத்தின் கிழக்குப் பபகுதியான கிழக்கு செருமனி 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு செருமனியின் தலைநகராக பெர்லின் இருந்தது. கிழக்கு செர்மனி 1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர்.

அதே போல பெருமைக்குரிய செருமானியத்தின் மேற்குப் பகுதியான மேற்கு செருமனி அதே காலகட்டத்தில், அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக உருவாக்கப்பட்டபின், நேட்டோப் படையினர் மேற்கு செர்மனியில் நிலை கொண்டிருந்தனர். 

இரண்டு நாட்டு மக்களையும் தடுத்து வைக்க, பெர்லின் சுவர் கட்;டப்பட்டிருந்தது. பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது. இதன் கட்டுமானப்பணி 1961 ஆகத்து 13 அன்று தொடங்கியது. இச்சுவர் பனிப்போரின் இறுதியில் 1989 இல் முற்றாக இடிக்கப்பட்டது. இடைப்பட்ட காலப்பகுதியில் இச்சுவரைத் தாண்டி மேற்கு செர்மனிக்குள் தப்ப முயன்ற பலபேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பனிப்போரின் இறுதியில் உள்நாட்டுக் குழப்பங்களின் உச்சக்கட்டத்தில் கிழக்கு செர்மனி அரசு 1989 நவம்பர் 9 இல் மேற்கிற்குள் செல்வதற்கு மக்களை அனுமதிப்பதாக அறிவித்தைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். பல்லாயிரக்கணக்கான மேற்கு செர்மனியினர் இவர்களை மறு பக்கத்தில் இருந்து வரவேற்றனர். அடுத்த சில கிழமைகளில் சுவர் இடிக்கப்பட்டது.

பெர்லின் சுவர் 140 கிலோமீட்டர்க்கும் மேல் (87 மைல்) நீளம் கொண்டது. ஜூன் 1962ல், இரண்டாவது சுவர் சுமார் 100 மீட்டர்கள் தூரம் கிழக்கு செர்மன் பகுதியில் கட்டப்பட்டது. சுவர்களுக்கு இடையே இருந்த வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பகுதி ‘மரணப்பகுதி’  என்றழைக்கப்பட்டது. மணல் அல்லது சரளை கற்களால் மூடப்பட்டிருந்த இப்பகுதி தப்ப நினைக்கும் மக்களின் கால்தடங்களை கண்டறிய உதவியது. பல ஆண்டுகளாக, பேர்லின் சுவர் நான்கு பதிப்புகளை கண்டது:

கம்பி வேலி (1961)

மேம்படுத்தப்பட்ட கம்பி வேலி (1962-1965)

கான்கிரீட் சுவர் (1965-1975)

எல்லை சுவர் 75 (1975-1989) என்பனவாகும்.

கிழக்கு பேர்லின் மற்றும் கிழக்கு சேர்மனியர்கள், முதலில் மேற்கு பேர்லின் அல்லது மேற்கு செர்மனிக்கு பயணம் செய்யவே முடியாது. இந்த கட்டுப்பாடு சுவரின் வீழ்ச்சி வரை அமுலில் இருந்தாலும் பிந்தைய ஆண்டுகளில் இந்த விதிகள் பல விதிவிலக்குகளை கண்டது.

1965 முதல் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் மேற்கே பயணிக்க முடியும்

முதன்மைக் குடும்ப விசயங்களுக்காக உறவினர்கள் வருகைகள்

தொழில்முறை காரணங்களுக்காக மேற்கே பயணிக்க வேண்டியிருந்த மக்கள் (உதாரணமாக, கலைஞர்கள், லாரி ஒட்டுனர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் முதலியோர்)

பெர்லின் சுவர், முழுமையாக ஒரே நாளில் தகர்க்கப்படவில்லை. அன்று மாலை தொடங்கி தொடர்ந்து வந்த நாட்களில், மக்கள் சுத்தியல் மற்றும் உளிகளை கொண்டு சுவரை தகர்த்தனர். இந்த மக்கள் சுவர் “மரங்கொத்தி பறவைகள்” என செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர். இருபுறமும் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவர் பகுதி தகர்க்க படுவதையும் பழைய சாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்படுவதையும் கண்டுகளித்தனர்.

பெர்லின் சுவரின் வீழ்ச்சி செர்மனி இரண்டும் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இவை 1990 அக்டோபர் 3 இல் இணைந்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,331.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.