Show all

குமாரசாமி காட்டம்! நீட் தேர்வின் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு.

தகுதி என்ற பெய்யான போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு என்பதை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தெளிவுபடுத்தியுள்ளார்.
 
19,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உக்ரைன் - உருசியா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவம் பயிலும் மாணவர், உக்ரைனில் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பள்ளி இறுதித் தேர்வில் 96 விழுக்காடும், 12 வகுப்பில் 97 விழுக்காடும் மதிப்பெண் பெற்ற நவீனுக்கு இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான இடம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், தன் கனவை நனவாக்க நவீன் தன்னை மருத்துவராக உருவாக்கிக்கொள்ள உக்ரைன் சென்றுள்ளார். அந்த இளைஞரின் மரணம் இந்தியாவின் மனசாட்சியைக் கேள்வி கேட்க வைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

நீட் தேர்வு பெற்றோர் மற்றும் மாணவர்களின் 'மரண சிலை'யாக மாறியிருக்கிறது. மேலும், உயர்கல்வி பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தாம் என்ற சூழலும் உருவாகியுள்ளது. பொருளாதார அடிப்படையில் தகுதி என்ற போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 99 விழுக்காடு மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியாரில் பயிற்சி பெற்றவர்கள். எனவே பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் எனக் குமாரசாமி குறிப்பிட்டிருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,176.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.