Show all

உலகத்திற்கு சீனாவின் உள்நோக்கம் புரிந்து விட்டதால், சீனாவின் கனவு திட்டத்திற்குப் பின்னடைவு

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்டை நாடுகளுடன் பட்டுப் பாதை அமைக்கும் சீனாவின் திட்டம் என்பது தொழில் வர்த்தக உறவுகளை பெருக்குவதற்காக மாபெரும் புரட்சி திட்டம் என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டமான பட்டுப் பாதை திட்டம், ஆசிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பெருக்குவதற்கான திட்டம் என்றும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கே வர்த்தகத்தில் ஆசிய நாடுகள் சவாலாக இருக்கும் என்றும் சீன அரசு அறிவித்தது.

இந்தப் பட்டுப்பாதை திட்டத்திற்காக சீன அரசு பல லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது. அதாவது சுமார் 214 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தது. இந்தப் பணத்தை திட்டத்திற்கு ஒத்துழைக்கும் மற்ற நாடுகள், உலக பிரபல கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவைகளிடமிருந்து கறக்க சீனா திட்டமிட்டிருந்தது.

சீனாவின் இந்தத் திட்டத்திற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. பட்டுசாலை என்ற பெயரில் சீனா தன்னுடைய ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ள இந்த மாதிரி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த சீனா, அண்டை நாடுகளுடன் நல்லுறைவை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப் படுவதாக தெரிவித்தது.

சீனாவிலிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு நடைபெற்ற தரை வழி வர்த்தகத்தில் முக்கியமான வழித்தடம் தான் பட்டுப் பாதை என்றழைக்கப்பட்டது. ஆனால் கால மாற்றத்தில் பட்டு சாலை என்பதே மறைந்து விட்டது. இந்த தரை வழி வர்த்தகத்தில் சீனாவின் பட்டு முக்கிய வர்த்தக பொருளாக விளங்கியதால் இதற்கு பட்டு சாலை என பெயர் வந்தது. இந்த சாலை சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா என்று நீண்டது.

சீனாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக இந்த பட்டுச் சாலை திட்டத்துக்கு நவீன வடிவம் கொடுக்க தொடங்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது. இப்போது சீனா இந்த பட்டுச் சாலை மார்க்கத்தை புதிய வடிவில் தொடர்வண்டிப் பாதையாக உருவாக்கியுள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடியை ஒதுக்கி முயற்சிகளை எடுத்துள்ளது. அண்மையில் இந்த பட்டுச் சாலை மார்க்கத்தில் சரக்கு தொடர்வண்டி சேவையையும் தொடங்கிவிட்டது.

பாகிஸ்தான், ஹங்கேரி உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவின் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களைத் துண்டித்து வரும் நிலையில், இந்தப் பட்டுச் சாலை திட்டத்தின் எதிர்க்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பாஷா அணை திட்டம் அமைப்பது தொடர்பாக சீனாவுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது. இதுபோன்ற சகோதரத்துவ நாடாக கருதப்படும் பாகிஸ்தானுடன் சீனா பல திட்டங்களில் ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றில் பல நிதிநெருக்கடியால் பாதியில் நிற்பதால், பட்டுப் பாதை திட்டம் தற்போது பெரும் சிக்கலில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சீன பொருளாதாரத்தில் தேக்கமான நிலை நிலவுகிறது. உள்நாட்டு நிகர உற்பத்தி தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு வர்த்தகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த திட்டத்தின் மூலமாக ராணுவத்தையும், சீனாவின் உள்கட்டமைப்புகளையும் சீர்செய்ய சீனா முயற்சிப்பதாக உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,664

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.