Show all

முன்னெடுக்கப்படும் நல்லவை நாடி தீய சொலின்! இலங்கையில் சிங்களப் பேரினவாத கருத்துப்பரப்புதலுக்கு காற்புள்ளியுடன்

தற்போது இலங்கையில் தமிழர்வெறுப்பு தலைமை பெறாத, நல்லவை நாடிய கருத்துப்பரப்புதல் முன்னெடுக்கப்பட தொடங்கியுள்ளது. அதில் இடம்பெறும் தீயசொலின் வகையை சுட்டிக்காட்டுவதற்கானது இந்தக் கட்டுரை.

09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை, இலங்கையின் அரசுமுறை கருத்துப் பரப்புதலாக: குமரிப்பேரூழியில் எஞ்சிய தமிழரான ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதமே இடம் பெற்றிருந்தது. தமிழர்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைக்குப் பாரபட்சம் இல்லாமல் எந்த நாட்டோடும் உறவுவைத்துக் கொண்டிருந்தன சிங்களப் பேரினவாத அரசுகள். அதன் விளைவு: நாடு விடுதலைபெற்ற காலத்திலிருந்து இது வரை சந்தித்திராக பெரும் பொருளாதார சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது இலங்கை. 

தற்போது இலங்கையில் தமிழர்வெறுப்பு தலைமை பெறாத, நல்லவை நாடிய கருத்துப்பரப்புதல் முன்னெடுக்கப்பட தொடங்கியுள்ளது- ஆனால் தீயசொலின் வகையாக.

இலங்கையின் கடல், நிலமும் சீனாவுக்கு வழங்கப்பட்டது. எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்கினர். துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்கினர். இவ்வாறான நிலைமையில் இலங்கையின் வான் பரப்பும் 29 மில்லியன் டொலர்களுக்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய நாளில் அமைச்சரவை பத்திரம் ஒன்று பதிகை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.

29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த அதிபர் நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இலங்கை மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பம். எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாது மக்கள் வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், இலங்கையில் பாதுகாப்பு கட்டமைப்புக்கு எனக் கூறி, இலங்கையின் வான் பரப்பு இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.

கண்காணிப்பு உலங்கி விமானங்களை பறக்கவிடுவதற்காக இலங்கை வான் பரப்பு விற்பனை செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பமாக இதனை நான் பார்க்கின்றேன். இந்தியாவுடன் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதில் ஒன்று இலங்கை மக்களின் உயிரியல் அடையாளங்களை அதாவது கைவிரல் அடையாளங்களை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் உரிமையை வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தொழிற்நுட்ப அமைச்சுக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மூன்று உலங்கிகள் மற்றும் நான்காயிரம் டன் எடை கொண்ட மிதக்கும் மிதவை படகு ஆகியவற்றை இலங்கையில் பயன்படுத்த இந்திய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சம்பந்தமான முழு பாதுகாப்பு இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வந்த வீரர்பெருந்தகை இலங்கை கடற் பாதுகாப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்திய கடற் கண்காணிப்பு அமைப்புக்கு அம்பாந்தோட்டையில் ஒரு மையத்தை தொடங்க வாய்ப்பு வழங்கப்படும். சீனாவுக்கு துறைமுகம், இந்தியாவுக்கு கடல், மிகப் பெரிய போரை ஏற்படுத்தக் கூடியது.

இது மிகப் பெரிய முட்டாள்தனமான செயல். எண்ணிம அடையாள அட்டை தொடர்பான பொறுப்பும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை ஆவணங்கள் அனைத்தும் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு செல்லும் முன்னர் தயார் செய்யப்பட்டவை என்பது தெளிவாகியுள்ளது எனவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார். 

இனியவை கூறல் அதிகாரத்தில் இடம்பெறும் திருக்குறள் இது.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
இந்தக் குறளுக்கு: நல்லவை நாடி இனிய சொலின் வகையான கருத்துப் பரப்புதலை முன்னெடுத்தால், அல்லவை தேய்ந்து அறம் பெருகும் என்பது பொருளாகும். 

இலங்கை நல்லவை நாடுவது சரிதான். அதற்காக தமிழர்க்கு எதிராக முன்பு எடுக்கப்பட்ட அதே வேகத்தில் நன்றி செய்த நாடுகளின் மீது தீய சொலின் வகை கருத்துப்பரப்புதலும் பிழையே ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,196.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.