Show all

பேரளவாக மதிப்பிழந்துள்ளது பிட்காசு! ஏமாற்றத்தில் முதலீடு செய்த எல்சால்வடார்

அண்மையில் பிட்காசு 60விழுக்காடு வரை மதிப்பினை இழந்துள்ளது. இந்தப் பெரும் வீழ்ச்சியின் மூலம் எல்சால்வடார் நாட்டு மக்கள் பிட்காசின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர். 

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்காவில் உள்ள 'எல் சால்வடார்' என்னும் நாட்டில் கடந்த ஆண்டு அந்த நாட்டின் குடிஅரசுத் தலைவர் நயீப் புகேலே பிட்காசை தேசிய நாணயமாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் பிட்காசை தேசிய நாயணமாகக் கொண்ட முதல் நாடாக வரலாற்றில் பதிவானது அந்த நாடு.

ஆனால், எல் சால்வடார் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடு. மேலும், அந்த நாட்டுக்கு இருக்கும் கடன் மிகவும் அதிகம். இந்த நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பிட்காசைப் பயன்படுத்தி என்று நம்பினார் குடியரசுத் தலைவர் புகேலே.

அண்மையில் பிட்காசு 60விழுக்காடு வரை மதிப்பினை இழந்துள்ளது. இந்தப் பெரும் வீழ்ச்சியின் மூலம் அந்நாட்டு மக்கள் பிட்காசின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்தனர். 

எல் சால்வடாரின் தேசியப் பொருளாதாரத்தில் பிட்காசை அறிமுகப்படுத்த அவரது அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டதில் 15 விழுக்காட்டு தொகையை ஒதுக்கியது. 

பிட்காசு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியது அந்த நாட்டு அரசு. இந்தச் செயலியை தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் 30 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2,400) அறிமுகப் பரிசாக வழங்கியது. 30 டாலர் என்பது அந்த நாட்டுக் குடிமகனின் ஆண்டு சம்பளத்தில் 1விழுக்காடு ஆகும்.

சுமார் மூன்று மில்லியன் குடிமக்கள் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து பிட்காசு மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனராம். ஆனாலும், அரசாங்கம் பரிசாக கொடுத்த 30 டாலரை செலவு செய்த பிறகு அந்தச் செயலி பயன்படுத்துவதை நிறுத்தியுடன், அந்த செயிலியைத் தங்கள் செல்பேசியிலிருந்து நீக்கியும் விட்டனர். அந்த நாட்டின் மொத்த மக்கட்தொகையில் தற்போது 10விழுக்காட்டினர் மட்டுமே அந்தச் செயலியின் மூலம் பிட்காசு பரிவர்த்தனங்களை செய்து வருகின்றனர்.

அரசாங்கம் கொடுத்த 30 டாலரின் தற்போதைய மதிப்பு 10 டாலராக சரிந்து விட்டது. இதனால் மக்கள், பிட்காசு மேல் இருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

பண இழப்பு அதிகரித்து வருவதால், உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதியின் விலை உயர்வுக்கு மானியம் வழங்கவும், வரவிருக்கும் கடனைச் செலுத்தவும் எல் சால்வடார் அரசாங்கம் போராடி வருகிறது.

ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு வாங்கி குறைந்தது பதினோரு விழுக்காட்டிற்கு விற்க முடியும் என்பது மரபு சார்ந்த வணிகம். உலகமே அந்த வகை வணிகத்தில்தான் ஆதாயம் பார்த்து வருகிறது. 

முதலீடு செய்கிற பொருள் அல்லது எண்ணிம செலாவணி அல்லது பங்கு சந்தை ஏற்ற இறக்கம் கொண்டது என்றால்; அதில் சேமிப்பாக மட்டுமே முதலீடு செய்து இழப்பில்லாத ஆதாயம் பார்க்க முடியும். 

இந்த மாதம் பத்து ரூபாய் விற்கும் பங்கின் மீது எளிதான அளவு சேமிப்பு தொகையை முதலீடு செய்து விட்டு, என்றைக்கு இருபது விழுக்காடு இலாபம் கிடைத்தாலும் விற்றுவிட வேண்டும். அதில் ஐந்து விழுக்காடு கழிவு போக பதினைந்து விழுக்காடு இலாபம் நிற்கும். இலாபம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் விலை ஒன்பது எட்டு என்று குறைந்து இருந்தால், அடுத்த மாதமும் சேமிப்பு முதலீடு செய்ய வேண்டும். 

போன மாதம் பத்து ரூபாய்க்கு பங்கு வங்கி இந்த மாதம் எட்டு ரூபாய்க்கு பங்கு வாங்கினால் உங்கள் பங்கின் சராசரி விலை பத்திலிருந்து ஒன்பதாகி விடும். பத்து ரூபாய்க்கு பங்கு வாங்கியிருந்த போது பனிரெண்டு ரூபாய்க்கு பங்கு விலை உயர்ந்தால்தான் விற்க வேண்டும். ஆனால் இரண்டாவது மாதத்தின் எந்த நாளிலும் பதினோரு ரூபாய்க்கு பங்கு உயர்ந்தாலே நீங்கள் அனைத்து பங்கையும் விற்றுவிட்டு ஆதாயம் பார்க்கலாம். குறளிச்செலாவணிக்கும் (கிரிப்டோ கரண்சி) இதுதான் சிறந்த முறை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,302. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.