Show all

டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநராக அசோக் எல்லுசாமி! உலகைக் கலக்கும் தமிழர்கள் வரிசையில்

தானிவலவன் குழு இயக்குனராக தமிழ்நாட்டைச்  சேர்ந்த அசோக் எல்லுசாமியை பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விவரித்துள்ளார்.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான, மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கால் பதித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் மின்சார கார் விற்பனையில், இந்த ஆண்டு போர்டு உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது. அதோடு அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டிற்கான சிறந்த மனிதராக டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கை, டைம்ஸ் இதழ் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் தானிவலவன் குழு (ஆட்டோபைலட் டீம்) இயக்குனராக தமிழ்நாட்டைச்  சேர்ந்த அசோக் எல்லுசாமியை பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விவரித்துள்ளார். 

இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், டெஸ்லா நிறுவனம் தானி வலவன் குழுவை தொடங்க உள்ளது என நான் கீச்சு பதிவிட்டிருந்தேன். அந்த கீச்சு மூலம் முதன் முதலில் தானி வலவன் குழுவில் தேர்வு செய்யப்பட்டது அசோக் தான் என்று கீச்சுவில் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்லா தானி வலவன் குழுவுக்கான பணியாட்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். அந்த துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் சொல்லி இருந்தார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் முதல் ஆளாக அசோக் எல்லுசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி, கிண்டி பொறியியல் கல்லூரியில், மின்நேரியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியல் பட்டம் பெற்றவர். பின் வாப்கோ வாகன கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் வோக்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். 

அதன்பின், அவர் டெஸ்லாவில் மென்பொருள் வல்லுனராக பணிக்கு சேர்ந்தார். இப்போது டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.