Show all

அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை! புது வித பளுதூக்குதல் போட்டியில்

தமிழர் பெருமிதம்! ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டி மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 அகவை 63கிலோ எடை பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழர் பெருமிதமாக கொண்டாட வாய்ப்பளித்துள்ள கீர்த்திநிதி: சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்கு அந்நாட்டில் பிறந்து, வளர்ந்த பெருமைக்குரிய பெண்பிள்ளையாவார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக, புது விதமான இந்தப் பளுதூக்குதல் விளையாட்டுப்  போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான் இவ்வளவு விரைவில், இந்த விளையாட்டின் ஒலிம்பிக்காக கருதப்படும் இந்த தொடரில் அமெரிக்காவுக்காக பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுகால கனவை நிறைவேற்றியுள்ளது" என்று பெருமை பொங்க கூறுகிறார் கீர்த்தி நிதி.

தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தியின் தந்தை கருணாநிதி 32 ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றார். பிறகு மூன்று ஆண்டுகளில் நாமக்கல்லை பூர்விகமாக கொண்ட சாந்தியுடன் திருமணமானவுடன், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், கீர்த்தியும் அமெரிக்காவில் பிறந்தனர்.

தனது மகளின் வெற்றி குறித்து சாந்தி பேசுகையில், சிறு அகவைலிருந்தே நேர்த்தியான செயல்பாட்டை மேற்கொள்ளும் கீர்த்தி, பள்ளிக்காலத்தில் பரத நாட்டியத்தில் அசத்திய நிலையில், கல்லூரியில் சேர்ந்தவுடன், ஒரேயடியாக புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடப்போவதாக கூறியதை மனரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், எனது மகளின் ஆர்வத்திற்கு தடைபோட கூடாது என்ற ஒரே காரணத்துக்காக நானும் எனது கணவரும் ஆர்த்திக்கு தொடக்கத்தில் இருந்தே முழு ஆதரவு அளித்து வருகிறோம். இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய அணிக்காக சர்வதேச அளவில் போட்டியிட்டு எனது மகள் வெற்றிபெற்றுள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.

தான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா என்றாலும், தமிழ்நாட்டுடனான தனது உறவு எப்போதும் தொடரும் என்றும், தான் தமிழராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் கீர்த்தி கூறுகிறார்.

“சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தாத்தாவும், பாட்டியும் இறந்துவிட்டனர். அதற்கு முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையின்போது, ஒன்று முதல் இரண்டு மாதத்திற்கு நானும், எனது அண்ணனும் தமிழ்நாட்டிற்கு வந்து உறவினர்களுடன் நேரம் செலவிடுவோம். அப்போது, தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், உணவு வகைகள், மொழியின் சிறப்பு போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பள்ளியில் படித்த போது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்லும்போது, என் நண்பர்கள் கேலி செய்ததுண்டு. ஆனால், நான் ஒருபோதும் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. இப்போதுகூட எனது உடற்கட்டை பராமரிக்கும் உணவு வகைகளில் அவை தொடருகின்றன" என்று கூறுகிறார்.

“எனது குழந்தைகள் வளர்ந்த நேரத்தில், தமிழை சொல்லி கொடுப்பதற்கான வாய்ப்பு நியூ ஜெர்சியில் மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது. இருப்பினும், எங்களது வீட்டில் எப்போதுமே தமிழ் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதால், பேச்சுத் தமிழை பொறுத்தவரை எனது குழந்தைகளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எனினும், தற்போது அமெரிக்கா முழுவதுமுள்ள தமிழ் கல்வி கூடங்களை பயன்படுத்தி தங்களது மொழியறிவை மேம்படுத்த எனது குழந்தைகள் விரும்புகின்றனர்" என்று கூறுகிறார் கீர்த்தியின் தாயார் சாந்தி.

இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களை அவர்களது சொந்த குடும்பத்தினர் குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார் கீர்த்தி.

“இந்த சமூகம் நினைப்பதை போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்த பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தை செய்ய பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரளிக்க வேண்டும், நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்" என்று கூறும் கீர்த்தி புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டி வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும் பணிபுரிகிறார்.

தற்போதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டி, வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு என்று கீர்த்தி கூறுகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.