22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 சட்டமன்றஉறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓகி புயலின் கோரத்தாண்டவம் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசு தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதே போன்று ஓகி புயலின் போது கடலுக்கு சென்று கரை திரும்பாத ஆயிரக்கணக்கான மீனவர்களுக்காக மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு கோரிக்கைகளோடு, புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை தோட்டங்களுக்காக உற்பத்திக்கு ஏற்ப நிவாரணம் தர வேண்டும் என்று அந்த மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்றஉறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றஉறுப்பினர்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன், பிரின்ஸ்,மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,630
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.