Show all

நாளை தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை 

இரண்டாவது தவணை சொட்டுமருந்து முகாம் நாளை காலை நடைபெறவுள்ளது. முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட 7.5லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து 1640 சொட்டுமருந்து மையங்களில் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் நாளை நடைபெறும் இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும். 

இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், தொடர்வண்டி நிலையங்கள்;, பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்து வேலைநிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சொட்டுமருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், சுழல் சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6700 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

எனவே 5 அகவைக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் அவசியம் போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.