Show all

தமிழக வறட்சி நிவாரணத் தொகை வெறும் 1712.10 கோடி நடுவண் அரசு இன்று ஒதுக்கியுள்ளது

தமிழக அரசுக்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக-

தமிழக அரசு நிவாரணமாகக் கேட்ட 39565 கோடி ரூபாய்க்கு வெறுமனே நான்கு விழுக்காட்டுத் தொகையான 1712.1 கோடி ரூபாய் மட்டுமே நடுவண் அரசு ஒதுக்கியுள்ளது.

     இது தமிழக பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

     தமிழகத்தில் கடந்த ஆண்டு, சராசரியை அளவை விடவும் மிகவும் குறைந்த அளவே மழை பெய்தது. இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயம் முழுவதுமாகப் பொய்த்துப் போனதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனமுடைந்தும், அதிர்ச்சியிலும் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தனர்.

     அதனையடுத்து மத்திய குழு தமிழகத்துக்கு வந்து வறட்சியை மதிப்பிட்டது. மேலும், வறட்சி நிவாரணமாக 2014.45 கோடி வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், நடுவண் அமைச்சர் தலைமையில் கூடிய தேசிய செயற்குழுவின் துணை அமைப்பு கூடி, 1748 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்க கடந்த 23ஆம் தேதி முடிவு செய்தது.

     இந்தத் தொகை வறட்சியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்துக்கு போதாது. அது எந்த வகையிலும் உதவி செய்யாது என்று பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தும் நடுவண் அரசு, இன்று எந்த மாற்றமும் இல்லாமல் 1712.10 கோடி ரூபாயை வறட்சி நிவாரணமாக ஒதுக்கியுள்ளது. வர்தா புயல் நிவாரணத்தொகையாக வெறும் 264.11 கோடி ரூபாயை ம்ட்டுமே ஒதுக்கியுள்ளது.

     அதிக நிவாரணத்தொகை கேட்டு, தமிழக விவசாயிகள் டெல்லியில், 19ஆவது நாளாக போராட்டம் நடத்தி வந்தாலும் நடுவண் அரசு அதனைக் கணக்கில் கொள்ளவில்லை எனபதையே இந்த நிதி ஒதுக்கீடு காட்டுகிறது என அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

     தமிழக அரசு, நிவாரணமாக 39,565 கோடி ரூபாயைக் கேட்டது. ஆனால் கிடைத்ததோ, 1712.10 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.