18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசான மழை விட்டுவிட்டுப் பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்று பலராலும் அறியப்படும் பிரதீப், தனது முகநூலில் இன்று காலை மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார். ஆனால், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியினால் பெய்து வரும் மழை சென்னைக்கு இன்னும் முடிந்துவிடவில்லை. வரும் செவ்வாய், அல்லது புதன்; நல்ல மழை காத்திருக்கிறது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு, தமிழகத்தின் தென்பகுதிகள் மற்றும், மேற்கு உள் மாவட்டங்கள் முதல் முறையாக இன்றுதான் மழையைப் பெறப்போகின்றன. தமிழகத்தின் தென் பகுதி மற்றும் மேற்கு உள் மாவட்டங்கள் இறுதியாக மழை மேகங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளன. உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சிவகிரி (ஈரோடு) மாவட்ட மக்கள் இன்று நிச்சயம் மழையை ரசிப்பார்கள். இலங்கைக்கு அருகே நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி லேசாக நகர்ந்திருப்பதால், அதன் தாக்கத்தால் உள் மாவட்டங்களுக்கு முதல் முறையாக இன்று மழை கிடைக்கப் போகிறது. கோவை, ஈரோட்டின் சில பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு உள்ளது. வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும். நீலகிரியின் குன்னூர் பகுதியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது என்று பதிவிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.