Show all

தமிழக மக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கே சரியான வழியை காட்டிஉள்ளனர்: மார்க்கண்டேய கட்ஜூ

மிகப்பெரிய சவாலுக்கு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என தமிழக மக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கே சரியான வழியை காட்டிஉள்ளனர் என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறிஉள்ளார்.

     தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக் கோரி தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவை வெகுவாக கவர்ந்து உள்ளது.

 

     சல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கட்ஜூ கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். இப்போது தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறது.

     சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மக்களின் போராட்டம் வெற்றியை எட்டிஉள்ள நிலையில் போராட்டத்தை மார்கண்டேய கட்ஜூ பாராட்டி உள்ளார். இதுபற்றி முகநூலில் பதிவிட்டு உள்ள மார்கண்டேய கட்ஜூ,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துக்கள்! தமிழக மக்களின் இந்த மகத்தான போராட்டம் அடைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து, இந்தியர்களோ, ஏன் தமிழர்களுமே கூட முழுமையாக உணர்ந்திருப்பார்களா? என்று தெரியவில்லை.

     ஆனால் இந்தப் போராட்டம் சல்லிக்கட்டோடு மட்டும் முடிந்துவிடுமோ என்றோ, தமிழகத்தோடு நின்றுவிடும் என்றோ நினைக்கக் கூடாது.

     இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக திகழும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், போதிய சுகாதார வசதி இல்லாமை, சத்துணவு குறைபாடு ஆகியவற்றுக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் தொடரப்பட்டு அவற்றிலும் வெற்றி காணவேண்டும். தமிழர்கள் ஏற்றிய இந்த தீப்பொறி நாடு முழுவதும் பரவி நமது நாட்டில் காணப்படும் மிகப்பெரிய எல்லா பிரச்சினைகளையும் முறியடிக்கவேண்டும். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவும் இந்த போராட்டம் அமைந்து இருக்கிறது.

 

     சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு அதை மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பின்பற்றவேண்டும். நாம் எல்லோரும் சாதி, மத, பேதமின்றி ஒருங்கிணைய வேண்டும். அனைவரும் பிரிந்து கிடக்காமல் ஒன்றாக இணைந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் இந்தப் போராட்டம் நிரூபித்து இருக்கிறது. இதே வழியில் போராடினால் இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

     மக்கள் ஒன்றாக திரண்டு புயல், சூறாவளி போல தங்களுடைய சக்தியை வெளிப்படுத்தினால் இந்த பூமியில் எதையுமே தடுக்க முடியாது என்பதையும் சல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி உணர்த்துவதாக அமைந்து உள்ளது.

     இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக மக்கள் தலைமைக்கு இந்தியாவிற்கே முன் உதாரணமாக உள்ளனர் மற்றும் மிகப்பெரிய சவால்களை எப்படி எதிர்க்கொள்ள ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற சரியான பாதையை காட்டிஉள்ளனர் என்று கூறிஉள்ளார்.

     எனக்கு மறு பிறவி மீது நம்பிக்கை கிடையாது. அப்படி மறுபிறவி இருப்பதாக வைத்துக் கொண்டால் முந்தைய பிறவிகள் ஒன்றில் நான் நிச்சயம் தமிழனாகவும் பிறந்திருப்பேன். நான் எப்போது தமிழ்நாட்டுக்கு சென்றாலும் (மார்க்கண்டேய கட்ஜூ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்) எனது சொந்த ஊருக்கு செல்வது போன்ற உணர்வுதான் ஏற்படும். எனக்கு தமிழ்நாட்டில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். என் மீது தமிழர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளனர்.

     இது மாதிரியான அன்புள்ளமும், பெருந்தன்மையும் தமிழர்களிடம் இருப்பதால்தான் நான் தமிழர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘நானும் ஒரு தமிழன்’ என்று அடிக்கடி பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு. தமிழர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் வாழ்க!

இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  

     சல்லிக்கட்டு போட்டியை காண நேரில் வருவதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார். ஆர்வலர்களிடம் நடைபெறும் இடம், தேதியையும் கேட்டு உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.