Show all

வரலாறு காணாத வகையில் போராடி, காவிரி மேலாண்மை வாரியம் பெறப்படும்! தமிழக நகர்வுகள் தரும் நம்பிக்கை

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நடுவண் அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத நிலையில் அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

அதுகுறித்து தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்கக் கூட தலைமை அமைச்சர் தயாராக இல்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழக அரசு மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது ஏன்? என்று பாமக வினா எழுப்பியிருக்கிறது.

மேலும், நரேந்திர மோடியைச் சந்திக்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையோ, விருப்பமோ அல்ல. மாறாக, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு கிழமைகளுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் ஆணையிட்டும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று கூறியுள்ளார். 

இது முறையல்ல என்பதால் மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காகத் தான் தலைமை அமைச்சரைச்; சந்திக்க தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானித்தது. அதற்கு மாறாக தமிழக தலைவர்களைத் தலைமை அமைச்சர் சந்திக்க மாட்டார் என்று கூறுவது தமிழகத்தை அவமதிக்கும் செயலாகும்.

தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தலைமை அமைச்சர் மோடி சந்திக்கத் தேவையில்லை. மாறாக உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பின்படி 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்றுக்குள், (29.03.2018) மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தால் போதுமானது. 

அவ்வாறு செய்ய வேண்டியது நடுவண் அரசின் கடமை ஆகும். ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், அதுகுறித்து கோரிக்கை விடுப்பதற்காக வருபவர்களையும் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். இதை சகிக்க முடியாது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என நடுவண் அரசு சொல்லாமல் சொல்லிவிட்ட நிலையில் இனியும் பொறுமை காப்பது தமிழக உரிமைகளை மேலும், மேலும் தாரை வார்ப்பதற்கு சமமாகும். 

இது தொடர்பாக சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. கடந்த 12 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நடுவண் அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மீண்டும் அதே சடங்கை செய்வது எந்த அழுத்தத்தையும் தராது.

1.தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூண்டோடு பதவி விலகுதல், 

2.டெல்லியில் தலைமை அமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லம் முன் தொடர்ந்து போராட்டங்களை நடத்துதல்,

3.தமிழகத்தில் காலவரையற்ற மறியல் போராட்டம் நடத்துதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே நடுவண் அரசை பணிய வைக்க முடியும்.

எனவே, வெற்றுச் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்காமல், மேற்கண்ட போராட்டங்களை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாமக முழுமையான ஆதரவளிக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கில், நடுவண் அரசு பாஜக தன் தொண்டர் அடிப்பொடியாட்களை வைத்து காலத்தை வீணடித்து இறுதியில் வஞ்சித்தே விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் பாஜகவின் தில்லாலங்கடிக்கு தமிழக அரசியல் கட்சிகள்;;; சோரம் போவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. 

இந்திய வரலாறு காணாத வகையில் போராடி காவிரி மேலாண்மை வாரியத்தைப் பெற தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,715. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.