14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராகி நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி வெற்றார். அவர் இன்று பதவியேற்க சட்டப்பேரவைக்கு வந்தார். பேரவைத் தலைவர் தனபால் அறையில் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது. அப்போது பேரவைத் தலைவர் தினகரனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இராகிநகர் சட்டமன்ற உறுப்பினராக தினகரன் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் துரோகம் வெற்றி பெற்றதாக வரலாற்றில் என்றுமே நிகழ்ந்ததில்லை. சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. இராகிநகர் வெற்றி மூலம் 6.5 கோடி மக்களின் பிரதிபலிப்பு வெளிப்பட்டுள்ளது. கட்சியும், சின்னமும் யாரிடம் இருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல. அதிமுகவின் ரத்தமும், சதையுமான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே தலையாயதாகும். சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மனதளவில் எங்கள் பக்கம் உள்ளனர். இராகிநகர் தோல்வி பதற்றத்தால் எடப்பாடியும்; பன்னீரும் நிர்வாகிகளை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பதவிக்காக 5 அல்லது 6 பேரின் சுயநலத்துக்கு துணை போக வேண்டாம். இந்த துரோக தலையிலான ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கவிழ்ந்து விடும். விதையுறக்கத்தில் உள்ள எங்கள் ஆதரவுநிலைப்பாட்டு சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது வெளியே வருவர். எங்கள் பக்கம் 18பேர்கள் வலுவாக நின்றனர். அப்போது அவர்கள் பக்கம் ஐந்தாறு பேர் மட்டும் நிற்பதைப் பார்ப்பீர்கள். அதிமுக ஆட்சி கலையாது! ஆளும் தலைமையே மாறும் என்ற உறுதியில் நிற்கிறார் தினகரன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,651
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.