Show all

சோபியா கைதில் அவ்வளவு வேகம் ஏன்? அறங்கூற்றுமன்றத்தை விமர்சித்த ராஜாவை கைது செய்ய தயக்கம் ஏன்? பாலகிருஷ்ணன் கேள்வி

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஒழிக என முழக்கமிட்டதற்காக சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை ஏன் எச். ராஜாவை கைது செய்ய மறுக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும். என சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டமிட்டு, கலவரத்தை தூண்டும் வகையில், அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மீறி, சிலையை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயற்சித்தபோது அனுமதி மறுத்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியும், உயர் அறங்கூற்றுமன்றத்தை மிக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தும் பேசியுள்ளார்.

எச். ராஜாவின் இத்தகைய வெறியூட்டும் பேச்சுக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. நடுவண்அரசில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, வகுப்புக் கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மதவெறி அரசியல் லாபம் அடையலாம் என எச்.ராஜா மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே எச். ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று பகிரங்கமாக பேசியதன் விளைவாக பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இவரது தூண்டுதலின் பேரால்தான் தென்காசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் போகிற இடங்களில் எல்லாம் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களை தூண்டும் வகையிலேயே பேசி வருகிறார்.

பாஜக ஒழிக என நியாயமான பேச்சுரிமையை கையிலெடுத்த சோபியாவை கைது செய்த காவல்துறை ஏன் எச். ராஜாவை கைது செய்ய மறுக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கண்டும், காணாமலும் வாய்மூடி மௌனியாக செயல்படுவது வெட்கக் கேடு. சில மாதங்களுக்கு முன்னர் சிபிஐ (எம்) வழக்கறிஞர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, ராஜாவின் பேச்சுக்களின் குற்றத்தன்மை அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர்அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்குப் பிறகும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய அணுகுமுறை, வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்வதற்கான களத்தை உருவாக்குகிறது. தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து, மதவாத வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் எச். ராஜாவை உடடினயாக கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,914.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.