Show all

குந்தவைநாச்சியார்! தமிழர் பெருமிதம்! அகில உலக மகளிர் நாளில்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செம்பியன் எல்லாளன் இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன் நெடுங்கிள்ளி நலங்கிள்ளி கிள்ளிவளவன் கோப்பெருஞ்சோழன் கோச்செங்கணான் பெருநற்கிள்ளி இவர்கள் முற்காலச் சோழர்கள்.

விசயாலய சோழன், ஆதித்த சோழன், பராந்தக சோழன், கண்டராதித்தர், அரிஞ்சய சோழன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன, உத்தம சோழன், இராசராச சோழன், இராசேந்திர சோழன், இராசாதிராச சோழன், இராசேந்திர சோழன், வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், இவர்கள் இடைக்காலச் சோழர்கள்.

குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவரான முதலாம் இராஜராஜனின் தமக்கையும் , ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின்  மகளுமாவார்கள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில. மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவர். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறார் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட ‘சுந்தர சோழ விண்ணகர்’ என்னும் திருமால் கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில் ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (தற்காலத்தில் மானியங்கள் அனைத்திற்கும் ஆப்பு அடிக்கும் மோடி அரசு, தமிழகத்தின் விளை நிலஙகளில் எரிவாயு குழாய் பதிப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அக்கால என் தமிழ்அரசி குந்தவை நாச்சியார் விளைநிலங்களுக்கும், மானிய நிலங்களுக்கும் விதிவிலக்களித்திருப்பது ஒப்பு நோக்கி போற்றிக் கொள்ளத் தக்கது.)

இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.

இப்பொழுது ‘தாராசுரம்’ என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினார். இம்மூன்று கோயில்களுக்கும் அவர் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. 

இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் ஆற்றல் மிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.

அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ இளவரசி ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற குந்தவை நாச்சியாரை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் தமக்கையாகவும் வருகிறாள். செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள். இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள். வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதையும் பார்க்கையில் குந்தவையை நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி செதுக்கியிருப்பது தெரிகிறது. 

பராந்தக சுந்தரசோழன், செம்பியன் மாதேவி, அநிருத்தன், அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோர் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் குந்தவை நாச்சியார்.

குந்தவையும் அவள் தோழி வானதியும் குடந்தை சோதிடரிடம் வருகிறார்கள். அப்போது அங்கு வரும் வந்தியத்தேவனைச் சந்திக்கிறாள் குந்தவை. வானதியின் பயத்தினைப் போக்க ஆற்றங்கரையில் இறந்துபோன முதலையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில் அதை உண்மை முதலையென நினைத்து வந்தியத்தேவன் வேல் எறிகிறான். குந்தவையின் தோழிகள் இதனைக் கண்டு சிரித்துவிட வந்தியத்தேவன் கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இரண்டு முறை வந்தியத்தேவனைச் சந்தித்தும் அவனிடம் குந்தவையால் பேசமுடியவில்லை. அதன் பிறகு வந்தியத்தேவனே குந்தவையைத் தேடி வந்து குந்தவையின் சகோதரன் ஆதித்த கரிகாலன் கொடுத்தனுப்பிய ஓலையை தருகிறான். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். 

ஈழத்தில் அருள்மொழிவர்மனுக்குத் தஞ்சை நிலவரம் குறித்து எழுதி, உடனே இளவரசரை அழைத்துவரும்படிக் கூறி வந்தியத்தேவனிடம் பொறுப்பினை ஒப்படைக்கின்றாள்.

 

வந்தியத்தேவன் இளவரசரை சந்தித்து குந்தவையை கோடிக்கரை வரை அழைத்துவருகிறான். அருள்மொழிவர்மனின் உடல்நிலையை குணம் செய்ய நாகப்பட்டினதில் இருக்கும் புத்த விகாரத்திற்கு பூங்குழலி சேந்தன் அமுதன் துணையுடன் அனுப்புகிறான். இச்செய்தியை பழையாறையில் வசிக்கும் குந்தவையிடம் சேர்ப்பிக்கிறான். குந்தவையும், அநிருத்த பிரம்மராயரும் இணைந்து வந்தியத்தேவனை காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு துணையாக இருக்கும் படி அனுப்பி வைக்க முடிவு செய்கிறார்கள். அநிருத்தரால் சிறைபட்ட வந்தியத் தேவனை விடுவித்து காஞ்சிக்கு செல்லும்படியும், தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு எக்காரணம் கொண்டும் சென்றுவிடாமல் காக்கவும் அறிவுருத்துகிறாள். அப்போது வந்தியத் தேவன் மேல் இருக்கும் தன்னுடைய காதலையும் தெரிவிக்கின்றாள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் காஞ்சிக்கு செல்கின்றார்கள்.

குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.

இக்கல்லூரி, தமிழக அரசால் அரசினர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 17.9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. அப்போது குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. தமிழ்அரசி குந்தவைநாச்சியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,723.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.