Show all

நிகழ்ந்தன கொலையும், தற்கொலையும்! மருத்துவ மாணவி, காவல்துறை காவலருக்கு இடையிலான காதலில், காவலரின் சந்தேகம்

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாணவி சரஸ்வதி பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது முகநூல் மூலம் காவல்துறைக் காவலர் கார்த்திக்வேலுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சரஸ்வதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 'மருந்தியல் இளவல் அறுவையியல் இளவல்' மருத்துவர் படிப்புக்கு படிக்க இடம் கிடைத்தது.

பின்னர் காவலர் கார்த்திக்வேல் வேலூரில் இருந்து சென்னை வந்து சரஸ்வதியை அடிக்கடி சந்தித்தார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். கார்த்திக்வேல் தனது ஊரில் உள்ளவர்களிடம் மருத்துவ கல்லூரியில் படிக்கும் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிவந்தார். தன்னுடன் பணியாற்றும் காவலர்களிடமும் இந்த தகவலை அவர் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவி சரஸ்வதி அந்தக் கல்லூரியில் உள்ள ஒரு மாணவருடன் பேசுவதாக கார்த்திக்வேலுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சரஸ்வதி மீது கார்த்திக் வேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் உயிருக்கு உயிராக காதலித்த சரஸ்வதி தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாரோ, என்று சந்தேகம் மனதில் ஐயப்பாட்டைக் கிளப்பியது. வேறு ஒரு மாணவருடன் பேசுவது ஏன் என்று அவர் சரஸ்வதியிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாக இருவரும் பேசாமல் இருந்துவந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் நேற்று சரஸ்வதி தனது பிறந்தநாளை கொண்டாட அன்னியூருக்கு சென்றார். தனது காதலன் கார்த்திக்வேலுக்கும் தகவல் தெரிவித்தார். அவரும் இரவு அங்கு வந்தார். அப்போது வேறு ஒரு மாணவருடன் சரஸ்வதி பேசுவது குறித்தே கார்த்திக்வேல் மீண்டும் ஐயப்பாட்டைக் கிளப்பினார். அதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து சரஸ்வதியை கார்த்திக்வேல் துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,936.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.