Show all

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவப் பேச்சு

ஐந்து நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவமாக கூறினார்.

பாகிஸ்தான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு, மே மாதம் 28-ந்தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்தச் சோதனையை முன்னின்று நடத்தியவர், அந்த நாட்டின் அணுவிஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர்கான் ஆவார். அந்த அணுகுண்டு சோதனை நடத்தி 18-வது ஆண்டு நிறைவுற்றதை நினைவுகூரும் நாள் நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இதில் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் 1984-ம் ஆண்டே அணு வல்லமையை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் அணுகுண்டு வெடித்து சோதிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அணுகுண்டு வெடித்து சோதித்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் நிதி உதவி நின்று விடும் என அவர் நம்பினார். அதனால்தான் அணுகுண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ராவல்பிண்டி அருகில் உள்ள காஹூதாவில் இருந்து டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை பாகிஸ்தானிடம் இருக்கிறது.

எனது பணிகள் இல்லாமல், பாகிஸ்தான் ஒருபோதும் உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத நாடாக மாறி இருக்க முடியாது. மிக கடினமான ஒரு சூழ்நிலையில்தான் நாம் அணு ஆயுத நாடாக மாறினோம்.

பர்வேஸ் முஷரப் காலத்தில் அணு விஞ்ஞானிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாட்டின் அணு ஆயுத திட்டத்துக்காக நாங்கள் அரும்பாடு பட்டும் மோசமாக நடத்தப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அப்துல் காதிர் கான், 2004-ம் ஆண்டு, முஷரப் ஆட்சிக்காலத்தில் அணு ஆயுத தொழில் நுட்ப பரவலுக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டார். வீட்டுக்காவலில் வைக்கும் நிலை உருவானது. 2009-ம் ஆண்டு இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றம் அவர் ஒரு சுதந்திரமான மனிதர் என அறிவித்தது. அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என அனுமதித்தது நினைவுகூரத்தக்கது.

5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது என அப்துல் காதிர்கான் ஆணவமாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.