டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பெண்கள் மீது,
காவல்துறை தடியடி நடத்தியது குறித்து இரண்டு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று,
திருப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் தமிழக தலைமைச்
செயலாளர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர்
மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன்கோவில் செல்லும் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான
ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் நேற்று சாலை
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
அப்போது, திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
பாண்டியராஜன், மறியலில் ஈடுபட்ட பெண்களை கைகளால் தாக்கினார். இதில்,
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி அகவை45 என்ற பெண் நிலைகுலைந்தார். தடியடியில் பத்துக்கும்
மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை
உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் காலவரையற்ற
உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும்,
பாண்டியராஜன் பெண்களைத் தாக்கும் காணொளிப் பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது. தமிழகம்
முழுவதும் பாண்டியராஜனுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ‘பெண்களைத் தாக்கியது குறித்து பாண்டியராஜன் விளக்கம்
அளிக்க வேண்டும்’என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தச் சம்பவம் தொடர்பாக
தமிழக காவல்துறைத்தலைவர் தலைமைச் செயலாளர் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு மனித உரிமை
ஆணையம் எச்சரிக்கை அறிக்கை அனுப்பி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.