இடைத்தேர்தலில்
இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு செயலலிதா ஆட்சி மலர்ந்திட செய்வேன்
என தீபா அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதா போட்டியிட்டு
வெற்றி பெற்ற இராதாகிருட்டிணன் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் என தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு ஏப்ரல் 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியில் செயலலிதாவின் அண்ணன் செயக்குமார்
மகள் ஜெ.தீபா போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தி.நகரில்
உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது: நான் இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் நடக்கும்
இடைதேர்தலில் போட்டியிட உள்ளேன். செயலலிதாவின் ஆன்மா என்னை வழிநடத்தும். சசிகலா அணியினருடன்
இணையும் எண்ணம் இல்லை. ஓ. பன்னீர்செல்வம் அணியினர் ஆதரவு தந்தால் அதை ஏற்றுக்கொள்வேன்.
திமுக, அதிமுக சசி அணி தவிர யார் ஆதரவு தந்தாலும்
ஏற்றுக்கொள்ளத் தயார். மக்கள் ஆதரவு எனக்கு இருப்பதால் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு தீபா கூறினார்.
தீபா, எம்ஜிஆர் அம்மா
தீபா பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.
அதை நிறுவிய சிலநாட்களிலேயே
அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்குள் பூசல் வந்தது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.