Show all

மும்பையில் இன்று தொடங்குகிறது! பதினைந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா

பதினைந்தாவதுஇந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
 
12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை இருபது துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும், 

இது இந்தியாவின் வௌ;வேறு நகரங்களைப் பேராண்மைப் படுத்தும் எட்டு அணிகளால் விளையாடப்படுகின்றது. இத்தொடர் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்ட வேறுபாட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி வாகையர் பட்டம் பெற்றது.

15-வது இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

5 முறை வாகையரான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அ பிரிவிலும், 4 முறை வாகையரான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை ஆ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மும்பை வான்கடே திடலில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு வாகையர் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா புதிய தலைவராகி இருக்கிறார். ஆனாலும், ஒரு வீரராக டோனி நீடிப்பது சென்னை அணிக்கு பலமாகும். 

கடந்த பருவத்தில் 635 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, வெய்ன் பிராவோ, அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஆண்ட்ரு ரஸ்செல், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா மிரட்டுவார்கள். பந்து வீச்சில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுத்தி, சிவம் மாவி ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

இணையான வலிமை கொண்ட இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டம் கொண்டாடிகளின் ஆவலை தூண்டியுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் சென்னையும், 8-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை விண்மீன் விளையாட்டு சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,199.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.